சென்னையில் கணினித் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடங்கியது

கருத்தரங்கின் தொடக்க விழா இன்று (24.02.2010) காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களைப் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் வரவேற்று, தமிழ் மொழித்துறையில் நடைபெற்றுவரும் கணினி, மொழியியல் ஆய்வுகளை எடுத்துரைத்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் திருவாசகம் தலைமையுரையாற்றினார். இந்தக் கருத்தரங்கின் வழியாகப் புதிய மென்பொருள்கள் கிடைத்தால் நல்லது. சென்னைப் பல்கலைக்கழகத்தில்தான் தமிழ்க்கணினி ஆய்வுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.தமிழ்ப்பேரகராதி விரைவாக வெளிவர உள்ளது. மேலும் சிதம்பரநாதனார் அவர்கள் உருவாக்கிய ஆங்கிலம்-தமிழ் அகராதி இன்னும் இரண்டு திங்களில் குறைந்த விலையில் மறுபதிப்பாக வெளிவர உள்ளது.
இன்று கணிப்பொறியை அனைவரும் பயன்படுத்த வேண்டியநிலையில் உள்ளோம். ஆங்கிலம் தெரியவில்லையே என்று கணிப்பொறியைப் பயன்படுத்த யாரும் தயங்கவேண்டாம். படித்தவர்கள் மத்தியில்கூட இன்னும் இணையம் சரியாக அறிமுகம் இல்லை. கணினியைப் பயிற்றுவிக்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். கணினி ஆர்வமுடையவர்களுக்குச் சென்னைப் பல்கலைக்கழகம் நிதியுதவியும் ஆதரவும் வழங்கும் என்றார் துணைவேந்தர்.
பன்னாட்டுக்கருத்தரங்கின் மையவுரையினை முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருட்டினன் வழங்கினார். இரண்டு நாள் கருத்தரங்குகளில் ஆலோசிக்கப்படும் கருத்துகளை ஆராய்ந்து எதிர்வரும் தமிழ் இணைய மாநாட்டில் எடுத்துரைக்க வேண்டும். இந்தக் கருத்தரங்க ஆய்வு முடிவுகளை உத்தமம் மாநாட்டில் எடுத்துரைக்க வேண்டும்.
கணித்தமிழ் வளர்ச்சி தமிழகத்தில் மெதுவாக நடைபெறுகிறது. மெதுவாக நடைபெறுவதற்குக் காரணம் கண்டறியப்பட வேண்டும். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழறிவு குறைவாக இருப்பதால் கணினித்தமிழ் வளர்ச்சி குறைவாக உள்ளது. பள்ளி,கல்லூரிகளுக்குச் சென்று மு.இளங்கோவன், இராமன் போன்றோர் தமிழ்க்கணினியைப் பரப்புகின்றனர்.
பொறியியல் மாணவர்களுக்குத் தமிழ் தட்டச்சு பயிற்றுவிக்க அவர்கள் தமிழில் தட்டச்சிட்டு மடல் எழுதுகின்றனர். பேச்சு-உரை,உரை-பேச்சு,மொழிபெயர்ப்புகள் சார்ந்து தமிழ்க்கணினி வளர வேண்டும். பல்கலைக்கழகத்தில் துறைகள் வளர வேண்டும் என்றால் துறைசார் மாணவர்களை உருவாக்க வேண்டும். ஒருவர் பலரை உருவாக்க வேண்டும். ஒரு துறை வளர்ந்து வேர் விட வேண்டும் என்றால் பேராசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும்.
ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் கடல்சார் ஆய்வுகள் உலகத் தரத்திற்கு நடந்தது. ஆனால் இன்று அது முகவரி தெரியவில்லை. காரணம் அடுத்த தலைமுறைக்கு அந்த ஆர்வம் இல்லாமல் போனது.
மொழியறிவு சிலருக்கு இருக்கும்.கணிப்பொறி அறிவு இருக்காது. சிலருக்கு கணிப்பொறி அறிவு இருக்கும். மொழியறிவு இருக்காது. இவை இரண்டும் இருக்க வேண்டும். கணிப்பொறி மொழியாராய்ச்சிக்கு இயற்பியல் அறிவு, உடல்கூற்று ஆய்வு அறிவு,மூளையாய்வு அறிவு இருக்க வேண்டும்.
தமிழும் அறிவியலும்,தொழில்நுட்பமும் இணைந்தால்தான் தமிழ் வளரும். கணிப்பொறி அறிவு பெற்றவர்கள் தமிழறிவு, மொழியியல் அறிவு பெற்று விளங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் குறைந்த அளவு இரண்டு மையங்கள் கணினிமொழித் துறை ஆய்வுக்கு உருவாக்கப்பட வேண்டும். அது சென்னைப் பல்கலைக்கழகத்திலும்,மற்றொரு பல்கலைக் கழகத்திலும் உருவாக்கப்பட வேண்டும். முனைவர் பட்டம் உள்ளிட்ட ஆய்வுகள் இங்கு நடக்க வேண்டும்.
சிறப்பு நிலைப்பேராசிரியர்கள்,பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். பெங்களூர்,கான்பூர்,தில்லிப் பல்கலைக்கழகத்தில் உள்ள மிகப்பெரிய ஆய்வறிஞர்கள், மருத்துவத்துறை அறிஞர்கள் ஒன்றுகூடித் தமிழ்க்கணினி வளர்ச்சிக்கு ஆய்வுசெய்ய வேண்டும். ஆறு அல்லது ஏழுகோடி உருவா இருந்தால் இத்தகு மையங்கள் உருவாக்கமுடியும்.
தமிழர்களுக்கு உரிய மனப்பான்மை அரசியல் கண்கொண்டு பார்ப்பது. அரசியலைப் பயன்படுத்தி,தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும். தனிமனித தாக்குதல்களை விட வேண்டும். கருத்து வேறுபாடுகளை எடுத்துச் சொல்லும்பொழுது மனத்தைப் புண்படாமல் சொல்ல வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடாது.த மிழ்க்கணினி வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்றார் முனைவர் மு.ஆனந்தகிருட்டின்ன்.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பூங்கோதை வாழ்த்துரை வழங்கினார்.
செம்மொழி மாநாட்டுடன் இணையமாநாடும் நடக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழிலும்,கணினி வளர்ச்சியிலும் முதல்வருக்கு உள்ள ஈடுபாடு இதனால் விளங்கும். 1999 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் தமிழ் மாநாடு நடத்தியவர். தமிழ் விசைப்பலகையை(99) அறிமுகப்படுத்தியவர். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திற்குச் சுமார் 1 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதில் பல்லாயிரம் பேர் படித்து பயன்பெறுகின்றனர். தானியங்கி கணினி பயன்பாடுகள் தமிழிலும் வெளிவர வேண்டும். மொழி ஒரு கருவி மட்டுமல்ல.நம் பண்பாட்டை,வரலாற்றைத் தாங்கி நிற்கும் கருவி.என்றும் நிலையானது மொழியாகும். திராவிட இயக்க வளர்ச்சியும்,இட ஒதுக்கீடும் மக்கள் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது.
உத்தமம் தலைவர் தி.ந.ச.வெங்கட்ரங்கன்,முனைவர் நீலாதிரி சேகர்தாசு (இந்தியப் புள்ளியியல் கழகம், கொல்கத்தா) சிங்கப்பூர் பேராசிரியர் ஆ.இரா.சிவகுமாரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
நன்றி: http://muelangovan.blogspot.com/












Click it and Unblock the Notifications