நெல்லையப்பர் கோவிலில் கோடி அர்ச்சனை துவக்கம்
நெல்லை: நெல்லையப்பர் கோவிலில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் திருப்பணி மன்றம் சார்பில் உலக நன்மை வேண்டி கோடி அர்ச்சனை நேற்று காலை துவங்கியது.
காந்திமதி அம்மன் சன்னதி முன் 70 சிவச்சாரியர்கள் அமர்ந்து குங்குமம், மஞ்சள் கயிறு சாற்றி அர்ச்சனை செய்தனர். காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 20 நாட்கள் அர்ச்சனை நடக்கிறது.
ஒரு நாளைக்கு 5 லட்சம் அர்ச்சனை வீதம் 20 நாட்களில் கோடி அர்ச்சனை நடக்கிறது. 22ம் தேதியன்று அர்ச்சனை நிறைவடைகிறது. அன்று காலை அம்மனுக்கு 1008 சகஸ்ர கலச அபிஷேகம் நடக்கிறது.
இதையொட்டி சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாளுக்கு நேற்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது. 20 நாட்கள் நடைபெறும் இந்த கோடி அர்ச்சனையில் பொதுமக்கள் மற்றும் கட்டளைதாரர்கள் பங்கேற்கின்றனர்.
பொதுமக்கள் வழக்கம்போல் ரூ.4 செலுத்தி காந்திமதி அம்மன் மற்றும் மூலவர் உற்சவருக்கு நடைபெறும் கோடி அர்ச்சனையில் பங்கு பெறலாம்.
அம்பாள் சன்னதி கொடி மரம் அருகே கோடி அர்ச்சனைக்கான ஹோமங்கள் நடக்கிறது. ஹோமகுண்டங்களுக்கு தேவையான பொருட்களை பக்தர்கள் உபயமாக வழங்குகின்றனர்.












Click it and Unblock the Notifications