எதிர்பார்ப்பின்றி நன்மை செய்யுங்கள்- மாதா அமிர்தானந்தமயி
கோவை: எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், பிறருக்கு நன்மை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாதா அமிர்தானந்தமயி தேவி கூறினார்.
கோவை கவுண்டம்பாளையத்தை அடுத்த நல்லாம்பாளையத்தில் அமிர்தா வித்யாலய வளாகத்தில், இரண்டு நாள் பிரம்மஸ்தான விழா நேற்று துவங்கியது.
நிகழ்ச்சியில் மாதா அமிர்தானந்தமயி தேவி கலந்துகொண்டு பேசுகையில், 'தாவரங்கள் நன்றாக இருக்க வேண்டுமெனில், நன்றாக நீர் ஊற்றி பாதுகாக்க வேண்டும்.
அது போல மனித வாழ்க்கையில் நாம் நன்றாக இருக்க வேண்டுமெனில், சிறந்த கருத்துகளை ஏற்றுக்கொண்டு, அமைதியாக, அன்புமிக்க வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்.
நாம், அன்பை சேமிக்க கற்றுக் கொண்டால், அது நம்மை மட்டுமல்லாமல், நம்மை சுற்றியிருப்பவர்களையும் வளப்படுத்தும், காப்பாற்றும்.
இன்றைய உலகம் பொருளாதார வீழ்ச்சி, சுற்றுச்சூழல் பாதிப்பு, இயற்கை சீற்றம், பயங்கரவாதம், புகை, மது உள்ளிட்டவைகளில் சிக்கி சீரழிந்து வருகிறது. இவை, எல்லாவற்றுக்கும் காரணம் சுயநலம் தான். அதை விட்டுவிட்டு கூடி வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நதி, காற்று போன்ற இயற்கையின் படைப்புகள் எல்லாம், நம்மிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை. அது போல, நாமும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல், பிறருக்கு நன்மை செய்ய கற்றுக்கொள்ளவேண்டும்.
இந்த பூமி, நமக்கு சொந்தமில்லை. இந்த பூமிக்குதான் நாமெல்லாம் சொந்தம். இந்த உலகில், நாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்பதை உணர்ந்து, பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications