செம்மொழி மாநாட்டுக்கு கவிதை எழுதும் ராஜீவ் கொலையாளி முருகன்

கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் மாதம் நடக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்தும் தமிழ் அறிஞர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள் பங்கேற்று தங்கள் படைப்புக்களை சமர்ப்பிக்கவுள்ளனர்.
மாநாட்டுக்கான கவிதைப் போட்டிகளில் சிறைக் கைதிகளும் கலந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து இந்தப் போட்டியில் வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள 20 கைதிகள் பங்கேற்க விருப்பம் தெரிவித்து அனுமதி பெற்றுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகனும் இந்த கவிதைப் போட்டியில் கலந்து கொள்கிறார்.
வரும் 15, 16ம் தேதிகளில் கைதிகளுக்கான போட்டிகள் நடக்கின்றன. அதில் சிறந்த படைப்புகள் செம்மொழி மாநாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதிகள் செல்போன் சண்டை:
இந் நிலையில் சென்னை புழல் சிறையில் ஒரு கைதியிடம் இன்னொரு கைதி செல்போன் கேட்டு தகராறு செய்து கொண்டு அடித்து உருண்டனர்.
பொன்னேரியைச் சேர்ந்த பொன்முருகன் (29) வழிப்பறி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த அசோக் (27) திருட்டு வழக்குகளில் சிறையில் உள்ளார்.
பொன்முருகன் சிறை சுற்றுச் சுவர் அருகில் நின்று கொண்டு செல்போனில் வெளியில் இருக்கும் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இவருக்கு செல்போன் எப்படி வந்தது என்று தெரியவில்லை.
அப்போது அசோக் அங்கு சென்று, செல்போனைக் கேட்கவே இருவருக்கும் மோதல் மூண்டது. இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். இருவருக்கும் ஆதரவாக வேறு சில ரெளடி கைதிகளும் வந்து அடிதடியில் இறங்கவே சிறையே பரபரப்பானது.
பொன்முருகனை அசோக் இரும்பு கம்பியால் மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்தியதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதையடுத்து பொன்முருகனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் அதே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த 'பல்சர்' பாலா என்ற கைதியிடம் இருந்தும் இன்னொரு செல்போனை பறிமுதல் செய்தனர்.
கைதிகளை சந்திக்க வருவோர் பெரிய பப்பாளி பழத்துக்குள் செல்போனை வைத்தும், ஷாம்பு பாக்கெட்டில் கஞ்சாவை அடைத்தும் தந்து வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications