For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணதாசனை விஞ்சிய கவிஞர் இதுவரை பிறக்கவில்லை - ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

Kannadasan
கண்ணதாசனை விஞ்சிய கவிஞன் இதுவரை தோன்றவில்லை. கேள்வி ஞானத்தால் புரிந்து கொண்டு, வாழ்பவர்களுக்கும் புரியும் வகையில் கவிதை வடித்தவர் கண்ணதாசன் மட்டுமே என்று புகழாரம் சூட்டினார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் நடைபெற்ற 21வது ஆண்டு கண்ணதாசன் விழாவில் பங்கேற்று,​​ கவிஞர்கள் கண்ணதாசன்,​​ பாரதியார் உருவப்படங்களைத் திறந்து வைத்து ப.சிதம்பரம் பேசினார். அவர் கூறுகையில்,

55 வயதில் சரித்திரப் புகழை நாட்டி,​​ நம்மிடமிருந்து மறைந்தவர் கவிஞர் கண்ணதாசன்.​ எல்லோர் நாவிலும் பாடல்களைத் தவழச் செய்த சமகாலத்தில் வாழ்ந்த கவிஞர் அவர்.​

இலக்கியம்,​​ உரைநடை,​​ கவிதை,​​ நாடகம் என எதுவாக இருந்தாலும்,​​ காலத்துக்கு ஏற்ப அது அமைந்தால்தான் நிலைத்த இலக்கியமாக இருக்கும்.​ உதாரணமாக 60,​ 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நாடக அமைப்பை தற்போது அப்படியே அரங்கேற்றினால்,​​ அதனைப் பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள்.​ காலத்திற்கேற்ப இலக்கியத்தின் முகம் மாற வேண்டும்.​

அப்படி முகம் மாறும்போது இலக்கியத் தரம் இல்லை என்று யாரும் உறுதி செய்ய முடியாது.​ கவிதையைப் பொருத்தவரை பாரதியார்,​​ பாரதிதாசன் போன்றோர் தங்கள் காலத்துக்கேற்ப எழுத்து முறையை மாற்றிக் கொண்டதால்,​​ அவை நிலைத்து நிற்கின்றன.​ பாரதிதாசன் பாடல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன.​

அவர்கள் காலத்துக்குப் பிறகு வந்த படித்தவர் மட்டுமல்ல,​​ படிக்காதவர்கள் மற்றும் கேள்வி ஞானத்தையே நம்பியுள்ளவர்களுக்கும் புரியும் வகையில் தமிழ்க் கவிதைக்குப் புதிய வடிவம் தந்தவர் கண்ணதாசன்.​ பேச்சுவார்த்தையைக் கூட கவிதை வடிவாக்கினார்.

பட்டினத்தார் பாடல் புரியாதவர்களுக்கும் புரியும் வகையில்,​​ 12 வார்த்தைகளைக் கொண்டு வீடு வரை உறவு,​​ வீதி வரை மனைவி,​​ காடு வரை பிள்ளை,​​ கடைசி வரை யாரோ..​ என்ற சொற்கள் சாரத்தால் கவிதை தந்தவர் கண்ணதாசன்.

தமிழ்ப் பாடல்கள்,​​ தமிழ்க் கவிதை,​​ சங்ககாலக் கவிதைகள்,​​ அதற்கும் முந்தைய கவிதைகள் போன்றவற்றில் உள்ள உயர் கருத்துகளை தமிழ் இலக்கியச் சுவை குறையாமல் பிழிந்து தந்து சென்றவர் கவிஞர் கண்ணதாசன்.​

கவிஞனுக்குச் சொந்த வாழ்க்கையில் குறைகள்,​​ நிறைகள் இருக்கலாம்.​ அது காலப்போக்கில் மறைந்துவிடும்.​ நிலைத்து நிற்பது அவருடைய சாதனை எழுத்துகள்தான்.

கண்ணதாசன் எழுத வேண்டும்,​​ டி.எம்.​ சௌந்தரராஜன் பாட வேண்டும்,​​ சிவாஜி கணேசன் வாயசைக்க வேண்டும்.​ அப்படிப்பட்ட பாடல் நூறாண்டுகள் நிலைத்து விடும்.​ அவரது பாடல்கள் நிலைத்திருக்கின்றன.​ கண்ணதாசன் இப் பகுதியில் பிறந்தவர் என்பது நமக்கு பெருமைக்குரியது.​

அவரை விஞ்சிய கவிஞன் சம காலத்தில் இன்னும் தோன்றவில்லை.​ கண்ணதாசனை ஞானக் கண்களாக ஏற்று பல கவிஞர்கள் தோன்ற வேண்டும் என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X