சபரிமலைக்கு 674 சிறப்பு ரயில்கள்: பம்பையில் முன்பதிவு மையம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைகள் நடந்து வருகிறது. வரும் டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது.
இதில் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக இந்திய ரயில்வே 674 சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதில் தெற்கு ரயில்வே 448 ரயில்களையும், தெற்கு சென்ட்ரல் 140 ரயில்களையும், தென்மேற்கு 56 ரயில்களையும், மத்திய ரயில்வே 28 ரயில்களையும் இயக்குகின்றன.
இது குறித்து டிவிஷன் ரயில்வே மேனேஜர் ராஜீவ் தத் ஷர்மா நிருபர்களிடம் கூறியதாவது,
முதன்முறையாக வடகிழக்கு பிராந்திய ரயில்வே கிழக்கு மாநிலங்களில் உள்ள ஐயப்ப பக்தர்களுக்காக 2 சிறப்பு ரயில்களை இயக்கவிருக்கிறது.
மேலும், தற்போதுள்ள ரயில்களில் கூடுதலாக 660 ஸ்லீப்பர் கோச்சுகளும், 30 ஏசி கோச்சுகளும் இணைக்கப்படும்.
இந்த ரயில்களுக்கு முன்பதிவு செய்ய பம்பையில் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட மையம் ஒன்று இயங்குகிறது என்று அவர் கூறினார்.
செங்கனூர், கோட்டயம், எர்னாக்குளம், திருவல்லாவில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இம்மையங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் ஹிந்தி பேசும் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.