புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினாலும் பிரச்சனை தான்!

புகை பழக்கத்தால் புற்றுநோய், இருதய கோளாறு, நுரையீரல் பிரச்னை என பலவிதமான நோய்கள் தாக்குவதைப் போல நீரிழிவு நோய்க்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
அதேநேரத்தில் சிகரெட் பழக்கத்தை விட்ட பின்னர் ஆறு ஆண்டுகள் வரை உடல் பருமன், நீரிழிவு போன்ற பிரச்னைகள் ஏற்பட 70 சதவீத வாய்ப்பிருப்பதாகவும், 10 ஆண்டுகள் கழிந்த பின்பு தான் உடல்நலம் இயல்புநிலைக்கு திரும்புவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வுக் குழு இதுபற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது. இதற்காக 10,892 பேரை தேர்வு செய்து 17 ஆண்டுகளாக நுணுக்கமாக கண்காணித்தும், பரிசோதித்தும் சில முடிவுகளுக்கு இக்குழுவினர் வந்துள்ளனர்.
இதுகுறித்து ஆய்வுக்குழுவில் இடம்பெற்ற ஜெசிக்கா என்ற ஆராய்ச்சியாளர் கூறுகையில், 'புகைப் பழக்கத்தை கைவிடுவது நல்லது. அதுவும் முடிவெடுத்த உடனேயே கைவிடுவது மிகவும் நல்லது. ஆனால் அப்படி செய்பவர்கள் உடம்பு எடை போடுவது பற்றியும் கொஞ்சம் கவனித்துக் கொள்ளவேண்டும்.
நாங்கள் ஆய்வுக்காக தேர்ந்தெடுத்த 10,892 பேரில் புகை பழக்கத்தை கைவிட்டவர்களில் 1.8 சதவீதம் பேருக்கு ஒவ்வொரு ஆண்டும் டைப்-2 டயபடீஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது. புகை பழக்கத்தை விட்டவர்களுக்கு முதல் மூன்றாண்டுகளில் 3.8 கிலோ வரை எடை கூடுகிறது.
எடை கூடுவதால் அபாயகரமான பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ஆனால், 10 ஆண்டுகளில் இப்பிரச்னையை எதிர்கொள்ளாதவர்கள் பின்னர் இயல்பான உடல்நிலைக்கு வந்துவிடுகின்றனர்.
அதிகமான எடை கொண்ட, அதே நேரத்தில் அதிகமாக சிகெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிறுத்தும் போது கவனமாக இருக்கவேண்டும். புகை பழக்கத்தை கைவிட ஆலோசனை வழங்குபவர்கள் எடை பிரச்னை குறித்தும் அறிவுரைகள் வழங்கவேண்டும்' என்றார்.
குண்டாக இருக்கும் செயின் ஸ்மோக்கர்கள், புகை பழக்கத்தை நிறுத்துவதற்கு முன்பும், நிறுத்திய பின்பும் உடல்பயிற்சிகளை சற்று கூடுதலாக செய்வது நல்லது. எனினும் இப்படிப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளை நிச்சயம் கேட்கவேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications