குவியும் வெளிநாட்டு பறவைகள்- வேடந்தாங்கல் சரணாலயம் நாளை திறப்பு

சென்னைக்கு அருகில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் நவம்பர் முதல் மார்ச் வரை சீசன் காலம் என்பதால் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பறவைகள் இங்கு வந்து கூடுகட்டி இனவிருத்தி செய்து பின் அவைகளின் நாடுகளுக்கு திரும்புகின்றன. சீசன் காலத்தில் மரங்களில் கூடுகட்டியிருக்கும் பறவைகளைக்காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வேடந்தாங்களுக்கு வந்து செல்வது வாடிக்கை.
26 வகையான பறவைகள்
தற்போது வடகிழக்குப் பருவமழை நன்கு பெய்துள்ளதால் வேடந்தாங்களில் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனையடுத்து சைபீரியா, ஆஸ்திரேலியா, பர்மா, இலங்கை, கனடா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 26 வகையான வெளிநாட்டு பறவைகள் சரணாலயத்துக்கு வந்துள்ளன. இந்த பறவைகள் வேடந்தாங்கல் ஏரியில் உள்ள நீர்க்கடப்பை மரங்களில் கூடுகள் கட்டும் பணியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள் பறவைகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கூடுகட்டும் பறவைகள்
நத்தைகுத்தி நாரை, கூழைக்கடா, சாம்பல்நாரை, பாம்புதாரா, வெட்டிவாயன், கரடிவாயன், வெள்ளை அரிவாள்மூக்கன், சிறியநீர்க்காகம், உள்ளிட்ட பல வகையான பறவைகள் ஆங்காங்காங்கே மரங்களில் தங்கி கூடுகட்டி வருகின்றன. இவை நவம்பர் மாத இறுதியில் குஞ்சுபொறிக்கத் தொடங்கும். மரத்திற்கு மரம் பறவைகள் தங்களின் குஞ்சுகளுக்கு இரை ஊட்டும் அழகை காண்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். குளிர்காலம் முடிந்து கோடை காலம் தொடங்கியவுடன் படிப்படியாக ஏரி நீர் வற்றத் தொடங்கும் அப்போது இந்த பறவைகள் தங்கள் குஞ்சுகளுடன் தங்களின் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிடும்.
இந்த பறவைகளை காண தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேடந்தாங்கலில் தற்போது பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பதற்காக வெள்ளிக்கிழமை முதல் பறவைகள் சரணாலயம் திறக்கப்படும் என்று வனச்சரகர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications