திருப்பதி கோவில் விரைவு தரிசன டிக்கெட் நேரம் மாற்றம் : பக்தர்கள் மகிழ்ச்சி
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கான விரைவு (ஸ்பீட்) தரிசன டிக்கெட் வழங்கும் நேரம் முறைபடுத்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக ஸ்பீட் தரிசனம் என்ற பெயரில் விரைவு தரிசன டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் விலை ரூ. 300. கோவில் நிர்வாகத்தின் இந்த முடிவு பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.
இந்த விரைவு தரிசன டிக்கெட் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் எதிரில் உள்ள கவுண்டரில் வழங்கப்படுகிறது. ஆனால் டிக்கெட் வழங்கும் நேரம் முறையாக இல்லாமல் இருந்ததால் பக்தர்கள் சிரமப்பட்டனர். டிக்கெட் வாங்க பல மணி நேரம் காத்திருந்தனர். இதையடுத்து தேவஸ்தானம் விரைவு தரிசன டிக்கெட் வழங்கும் நேரத்தை மாற்றியுள்ளது.
அதன்படி சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் காலை 7 முதல் மாலை 6 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் ஏகாந்த சேவை வரையிலும் வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை காலை 8.30 முதல் மாலை 6.30 வரை, புதன்கிழமை காலை 9.30 முதல் 6.30 மணிவரையிலும், வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 6 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 6 மணி வரையிலும் விரைவு தரிசன டிக்கெட் வழங்கப்படும்.
தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் மூலம் ரூ. 1. 58 கோடி வருமானம் வந்துள்ளது. மேலும், கடந்த 2 மாதங்களாக தினமும் உண்டியல் மூலம் ரூ. 1 கோடி வருமானம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications