குலசேகரப்பட்டணம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா-150 சிறப்பு பஸ்கள் இயக்கம்

விழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கோவில் கலை அரங்கத்தில் நடந்தது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் பொற்கொடி தலைமை தாங்கினார். தாசில்தார் வீரசாமி, முத்தாரம்மன் கோவில் நிர்வாக அதிகாரி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:
பக்தர்களின் வசதிக்காக கோவில் பகுதியில் 3 இடங்களில் குடிநீர் பந்தல் அமைக்கப்பட உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கவும், நகர் பகுதியில் சுத்தம் செய்யவும் பஞ்சாயத்து மூலம் ஏற்பாடு செய்யப்படும்.
விழா காலங்களில் தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க மின் வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தசரா விழாவுக்காக பக்தர்கள் குலசேகரபட்டிணத்திற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.
பக்தர்களின் வசதிக்காக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். நெல்லை, நாகர்கோவிலில் இருந்து அதிக அளவிலான பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது.
உடன்குடி, நெல்லை பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் தனியார் வாகனங்கள் தகுந்த இடத்தில் நிறுத்தப்பட வேண்டும். பக்தர்கள் பாதுகாப்பு கருதி விழா கொடியேற்றம் அன்று 128 போலீசாரும், தசரா விழாவில் 1200 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விபத்தை தவிர்க்க திருச்செந்தூர் தீயணைப்பு நிலையம் மூலம் கடலோரம் மற்றும் கலையரங்கம் பகுதியில் மீட்பு பணிகள் குழுவினர் இருப்பார்கள். கூட்டத்தில் விழா சிறப்பாக நடைபெற அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று உதவிக் கலெக்டர் பொற்கொடி கேட்டுக் கொண்டார்.
குலசேகரப்பட்டனம் தசரா விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் பல்வேறு வேடங்களில் உருவம் தரித்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications