செப்டம்பர் 29 முதல் ஹஜ் புனித யாத்திரை தொடக்கம்-தமிழ்நாடு ஹஜ் கமிட்டி
சென்னை: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கான முதல் விமானம், இந்தியாவில் இருந்து வரும் 29ம் தேதி புறப்படும் என தமிழ்நாடு ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
உலகமெங்கும் இருந்து ஆண்டுத்தோறும் லட்சக்கணக்கான முஸ்லீம்கள், ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியாவில் இருந்து ஹஜ் செல்லும் யாத்ரீகர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகளை இந்திய ஹஜ் கமிட்டி செய்து வருகிறது. மேலும் தமிழக யாத்ரீகர்களுக்கான ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
இந்தாண்டு ஹஜ் பயணம் குறித்து இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் அபூபக்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை வழியாக புதுசேரி, தமிழகம், அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4,000 பேர் இந்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இவர்களுக்கான பயண ஏற்பாடுகளை தமிழ்நாடு ஹஜ் கமிட்டியினர் செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் வரும் 29ம் தேதி புறப்படும். கடைசி விமானம் அக்டோபர் 31ம் தேதி புறப்படும். அதன்பின் சவுதி அரேபியாவில் இருந்து நவம்பர் 11ல் முதல் விமானமும், டிசம்பர் 11ம் தேதி கடைசி விமானமும் புறப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் முதலில் ஜெட்டா செல்வர். பின்னர் அங்கிருந்து மெக்கா செல்வது வழக்கம். அதன்பின் மெதீனாவிற்கு சென்று 8 நாட்கள் தங்கியிருந்துவிட்டு, அங்கிருந்து சென்னை திரும்புகின்றனர்.
தமிழக பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து ஜெட்டாவிற்கு அக்டோபர் 17ம் தேதி முதல் விமானமும், அதே மாதம் 31ம் தேதி கடைசி விமானமும் இயக்கப்படும் புனித பயணம் முடித்து சென்னை திரும்புபவர்களின் வசதிக்காக, நவம்பர் 28ம் தேதி மெதீனாவில் இருந்து சென்னைக்கு முதல் விமானமும், டிசம்பர் 9ம் தேதி கடைசி விமானமும் இயக்கப்படும்.
இந்திய ஹஜ் குழு சார்பாக, இந்தாண்டு 1,25,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். அடுத்தாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் இப்போதே தங்கள் பாஸ்போர்ட்டை தயாராக வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் காலாவதி நாள் 31.3.2013ல் முடிவுறாமலும் பார்த்த கொள்ள வேண்டும், என்றார்.












Click it and Unblock the Notifications