திருப்பதியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - இலவச தரிசனத்துக்கு 10 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ.73,000 மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு குவிந்ததால், இலவச தரிசனம் பெற வந்த பக்தர்கள் 10 மணிநேரம் வரை காத்திருந்தனர்.
மார்கழி மாதம் மற்றும் நேற்றுமுன்தினம் வார இறுதி நாள்(ஞாயிற்று கிழமை) என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
இதனால் திருப்பதியில் உள்ள தங்குவிடுதிகளில் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். தங்குவிடுதிகளில் இடம் கிடைக்காத பக்தர்கள் கோவில் அருகே உள்ள பூங்காக்களிலும், சாலையோரங்களிலும் தங்கி ஓய்வெடுத்தனர்.
வைகுண்டம் வரிசையில் உள்ள 31 அடுக்குகளும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. இதனால் இலவச தரிசனம் பெற வந்த பக்தர்கள் 10 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் பெற்றனர்.
மேலும் ரூ.50 மற்றும் ரூ.300 சிறப்பு தரிசனம் பெற வந்தவர்கள் 7 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் பெற்றனர்.
இலவச தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பாக இலவச உணவு, தண்ணீர் விநியோகிக்கப்பட்டது. வழக்கத்துக்கு அதிகமான கூட்டம் இருந்ததால் மகாலகு தரிசனத்திற்கு தேவஸ்தானம் ஏற்பாடு செய்து இருந்தது. நேற்றுமுன்தினம் மட்டும் சுமார் 73,000 பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்தாண்டு, ஏகாதசி அன்று சிறப்பு தரிசனம்:
புத்தாண்டு(ஜனவரி 1ம் தேதி), ஏகாதசி(ஜனவரி 5ம் தேதி), துவாதசி(ஜனவரி 6ம் தேதி) உள்ளிட்ட நாட்களில் அதிகாலை 4 மணி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஜனவரி 1ம் தேதி தரிசனத்திற்கு வரும் வி.ஐ.பி.க்கள் வரும் 25ம் தேதிக்குள் அவர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று திருமலை - திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி சீனவாசராஜூ தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications