சாம்பவர் வடகரை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
தென்காசி: முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையால் சபரிமலைக்கு செல்ல முடியாத ஐயப்ப பக்தர்கள் நெல்லை மாவட்டம் சாம்பவர் வடகரை ஐயப்பன் கோவிலுக்கு வந்து இருமுடி செலுத்தி விரதத்தை முடிகின்றனர்.
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகேயுள்ள சாம்பவர் வடகரையி்ல் பிரசித்த பெற்ற ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு நிகராக அதனை மாதிரியாக கொண்டு 18 படிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.
தற்போது முல்லை பெரியாறு அணை பிரச்சனை காரணமாக சபரிமலைக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள் சாம்பவர் வடகரையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு ஏராளமான வாகனங்களில் வந்து செல்கி்ன்றனர்.
கடந்த ஒரு வார காலமாக சென்னை, திண்டுக்கல், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் இங்கு வந்து சபரிமலையில் பூஜை செய்வதை போல் பூஜை செய்து இருமுடி இறக்கி விட்டு பக்தர்களே நேரடியாக ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர்.
அனைவரும் தரிசனம்
இக்கோயிலில் மற்ற ஐயப்பன் கோவில் மாதிரி இல்லாமல் ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் கோயில் கருவறை வரை சென்று வழிபாடு செய்து கொள்ளலாம். சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் தனியாக நின்றுதான் சாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால் இந்த கோயிலிலோ இந்த நிலைப்பாடு இல்லாமல் ஒவ்வொரு பக்தனும் தனது தாய், தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளோடு 18 திருப்படிகள் ஏறி சென்று கருவறையில் அமர்ந்து சாமி ஐயப்பனை தரிசனம் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் பக்தர்கள் தனது 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை சாமி ஐய்யப்பனுக்கு அபிஷேகம் செய்ய வைத்து வணங்குவது இக்கோயிலின் சிறப்பாகும். அதே போல் மாலை அணிந்த குருசாமிகள் சாமிக்கு அபிஷேகம் செய்யலாம். இக்கோயிலில் தினந்தோறும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும். காலை 7, 8 மணி, பகல் 11,12 மணி, மாலை 5,6 மணிக்கும் விஷேச காலங்களில் கூடுதலான நேரங்களிலும் அபிஷேகம் நடக்கும். மேலும் தமிழ் மாத பிறப்பன்று அதிகளவு பக்தர்கள் வந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருவர்.
மனைவியருடன் நவகிரகங்கள்
இக்கோயிலில் கருவறையை சுற்றி வெளிப்புறத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், விஷ்ணு துர்க்கை, பிரகாரத்தில் அன்னை காயத்ரி, அன்னை காமாட்சி, அன்னை லெட்சுமி, நாகராஜர், முத்து விநாயகர், அருணாசலேஸ்வரர், ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர், சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை, மாளிகை புறத்தமன் சிலைகள் அமைந்துள்ளன. மேலும் கணவன் மனைவியாக ஐம்பொன் திருமேனிகள் கொண்டவர்களாக நவக்கிரகம் உள்ளது. இது போன்ற நவக்கிர சன்னதி தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.