காதல் கல்வெட்டுக்கள்
Subscribe to Oneindia Tamil

நிலத்தை கீறிக்கொண்டு
முளைக்கும் விதையைப் போல..
உனைக் கண்டதும்
என்னுள் காதல் முளைத்தது…
கரிசல் காட்டிலும்
கண்மாய் கரையோரமும்
வளர்ந்த நம் காதலுக்கு
எளந்தா ஊரணியும்
புளியமரத்து முனியாண்டியுமே
சாட்சிகள்….
காதலின் நினைவுகளை
கள்ளிச்செடியில்
பொறித்து வைத்தோம்
கல்வெட்டுக்களாய்….
சித்ரா பவுர்ணமியில்
சித்ரகுப்தன் கதை கேட்கையில்
யாருக்கும் தெரியாமல்
பொரிகடலை பரிமாறினோம்…
விடிய விடிய
கதை கேட்டும் தூங்காமல்
ஆற்றில் இறங்கும்
அழகரைக் காண
மாட்டுவண்டியில்
மதுரைக்கு பயணித்தோம்….
கள்ளழகர் சாட்சியாக
என் கை பிடித்த தருணங்கள்
இன்றும்
என் நினைவில் நிழலாடும்…
காலமாற்றத்தால்
திசைக் கொருவராய்
இடம் பெயர்ந்த பின்னும்…..
ஆண்டுதோறும்
வைகையில் இறங்கும்
அழகரை காண்கையில்….
என் தாகம் தீர்க்க
நீ வாங்கித்தந்த
ஜிகர்தண்டாவின் சுவை
நாவில் இனிக்கும்












Click it and Unblock the Notifications