அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு-தொல்காப்பியர் பெயர் சூட்டினார் கருணாநிதி
சென்னை: அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். அதற்கு தொல்காப்பியர் பூங்கா என்றும் பெயர் சூட்டினார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் 58 ஏக்கர் பரப்பளவில் ரூ.23 கோடி செலவில் அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.
இதை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் பூங்காவுக்கு அனுமதி அளிப்பதில் தாமதம் செய்ததால், கடைசி நேரத்தில் இதன் திறப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
பின்னர் அனுமதி கிடைத்தது. இதையடுத்து நேற்று முதல்வர் கருணாநிதி பூங்காவைத் திறந்து வைத்தார். பின்னர் பூங்காவுக்கு தொல்காப்பியர் பூங்கா என்றும் பெயர் சூட்டினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில், சுற்றுச்சூழல் பூங்காவிற்கு தொல்காப்பியப் பூங்கா'' என்று பெயர் சூட்டுகிறேன். இந்தப் பூங்காவை, இந்த வட்டாரத்து மக்களும், வெளியூர் மக்களும், தமிழக மக்களும் தொல்காப்பியப் பூங்கா'' என்றே அழைக்க வேண்டும்.
பழந்தமிழர்களிலும் பழந்தமிழர் தொல்காப்பியர். அவருக்குப் பிறகுதான் வள்ளுவர், மற்ற ஞானிகள் எல்லாம் தமிழகத்திலே தோன்றி நமக்கெல்லாம் ஞானப்பால் வார்த்தார்கள். அத்தகைய முதல் தமிழன், தொல்காப்பியருடைய பெயரை, இந்த அடையாறு சுற்றுச்சூழல் பூங்காவிற்கு சூட்டுவதில் நான் பெருமையடைகிறேன். தமிழன் என்கிற பெருமிதத்தோடு, இந்தப் பெயரைச் சூட்டி மகிழ்கிறேன் என்றார்.
பூங்காவுக்கு வந்ததன் அடையாளமாக ஒரு மரக்கன்றையும் முதல்வர் நட்டார். பின்னர் பேட்டரி கார் மூலம் பூங்காவை சுற்றிப் பார்த்தார்.
பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications