சட்டசபை தேர்தல்-3835 வாக்குபதிவு இயந்திரங்கள் நெல்லை வருகை
நெல்லை: தமிழக சட்டசபை தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்டம் வாரியாக அனுப்பும் பணியும், சரிபார்க்கும் பணியும் தொடங்கியுள்ளது. நெல்லையில் பெங்களூரூ பெல் நிறுவன பொறியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதித்து வருகின்றனர்.
தமிழகத்தில் வருகிற மே மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 10 சட்டசபை தொகுதிகளில் 2 ஆயிரத்து 351 வாக்குச் சாவடிகள் உள்ளன.
வாக்கு பதிவிற்காக உத்தர பிரதேசத்தில் இருந்து 3835 வாக்குப்பதிவு இயந்திரங்கள் நெல்லை வந்துள்ளன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் நெல்லை ராமையன்பட்டியில் உள்ள விற்பனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்குபதிவு இயந்திரங்களை பரிசோதித்து தயார் படுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இதற்காக பெங்களூருவைச் சேர்ந்த பாரத் மிகுமின் நிறுவன பொறியாளர்கள் 6 பேர் நெல்லை வந்துள்ளனர். இவர்கள் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் முன்னிலையில் இயந்திரங்களை பரிசோதித்து வருகின்றனர். இந்த பணிகளை ஆந்திராவின் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலரும், தமிழக அரசின் தேர்தல் பார்வையாளருமான தட்சிணாமூர்த்தி, நெல்லை கலெக்டர் ஜெயராமன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.












Click it and Unblock the Notifications