தமிழகத்தில் அதிகரிக்கும் இருதார வழக்குகள்: கண்ணீர் வடிக்கும் பெண்கள்
நாமக்கல்: தமிழகத்தி்ல இருதார பிரச்சனை தொடர்பான வழக்குகள் குவிந்து வருவதாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய சேர்மன் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் இரு தார வழக்குகள் அதிகரித்துள்ளன. தினமும் அஞ்சல் மற்றும் நேரடியாக எங்களுக்கு குறைந்தது 20 புகார்கள் வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை இரண்டாம் தாரம் கட்டிய கணவன்மார்களைப் பற்றி தான் உள்ளது.
தங்கள் கணவன்மார்கள் தங்களைத் திருமணம் செய்து 3, 4 மாதங்கள் மட்டும் ஒன்றாக வாழ்ந்துவிட்டு அடுத்து வேறு பெண்களை மணக்கின்றனர் என்று அந்த புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மாதிரியான புகார்கள் வந்து குவிகின்றன.
இது தவிர வரதட்சணை கொடுமை, அடித்து துன்புறுத்துதல், மாமனார்-மாமியார் கொடுமை மற்றும் குடும்ப பிரச்சனைகள் குறித்தும் பல புகார்கள் வருகின்றன.
குடும்ப பிரச்சனை தொடர்பான புகார்களுடன் வருபவர்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது. ஜாதி வேற்றுமை காரணமாக பிரச்சனையை சந்திப்பதாக சில பெண்கள் புகார்கள் அளித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் அதிகாரியை அவரது உயர் அதிகாரி துன்புறுத்துகிறார் என்று புகார் வந்தது. இது குறித்து விசாரணை நடத்துமாறு போலீஸ் உயர் அதிகாரி ஒருவரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது நாமக்கல் மாவட்டத்தில் பெறப்பட்ட 13 புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது. இது போன்ற கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications