செயலிழந்த ஜெர்மன் செயற்கைக்கோள் தென்கிழக்கு ஆசியாவில் விழுந்தது
வாஷிங்டன்: விண்வெளியில் செயலிழந்த ஜெர்மன் நாட்டு செயற்கைக்கோளான ரோசாட் தென்கிழக்கு ஆசியாவில் நேற்று விழுந்துள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2.4 டன் எடை கொண்ட ரான்ட்ஜன் செயற்கைக்கோள் அல்லது ரோசாட் எனப்படும் ஜெர்மனி நாட்டு செயற்கைக்கோள் கடந்த 1990ம் ஆண்டு புளோரிடாவில் உள்ள கேப் கனாவரலில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் 1999-ம் ஆண்டு செயல் இழந்தது. அதில் இருந்து கடந்த 12 ஆண்டுகளாக விண்ணில் மிதந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த செயற்கைக்கோள் இந்த மாத இறுதியில் பல துண்டுகளாக பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.
அதன்படி அந்த செயற்கைக்கோள் நேற்று தென்கிழக்கு ஆசியாவில் எங்கோ ஒரு இடத்தில் விழுந்துள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் 30 துண்டுகளாக விழுந்த செயற்கைக்கோள் பாகங்களின் எடை 1.8 டன் ஆகும். அது எந்த இடத்தில் விழுந்ததோ அங்கு நிச்சயமாக சேதம் ஏற்பட்டிருக்கும்.
இது குறித்து அமெரிக்க விஞ்ஞானியான ஜானதன் மெக்டாவல் கூறியதாவது,
ரோசாட் செயற்கைக்கோள் தென்கிழக்கு ஆசியா நோக்கி தான் வந்தது. அது பூமியில் விழுவதற்கு முன்பு சாங்கிங் மற்றும் செங்டு என்னும் மக்கள் அதிகமுள்ள சீன நகரங்களை நோக்கி பயணித்தது. ஆனால் அது அங்கு விழுந்திருந்தால் இந்நேரம் தெரிந்திருக்கும். அப்படி ஒன்றும் இதுவரை தகவல் கிடைக்கவில்லை. அமெரிக்க ராணுவ தகவலின்படி ரோசாட் இந்தியப் பெருங்கடலிலோ அல்லது பர்மா கரையோரம் உள்ள அந்தமான் கடலிலோ அல்லது பர்மாவிலோ, சீனாவிலோ விழுந்திருக்கலாம் என்றார்.
ஆசிய அரசுகளிடம் இருந்தோ, அங்குள்ள விண்வெளி ஆய்வு மையங்களில் இருந்தோ இது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதனால் செயற்கைக்கோள் எந்த இடத்தில் விழுந்தது என்பது உறுதியாகத் தெரியவில்லை.
அந்த செயற்கைக்கோள் கடைசி நேரத்தில் திசை மாறி சென்று விழுந்திருக்கலாம் என்று ஜெர்மன் விஞ்ஞானி ஆன்ட்ரஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications