டெக்சாஸில் முருகனின் சூர சம்ஹாரம்!
சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய வம்சாவளியினரால் நிர்மானிக்கபட்டுள்ள டி.எஃப்.டபுள்யூ மஹாலட்சுமி கோவிலில் விநாயகர், சிவபெருமான், வெங்கடாசலபதி, முருகன் உள்ளிட்ட அனைத்து இந்து கடவுள்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அங்கே இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து திருவிழாக்களும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை, நவம்பர் 5ம் தேதி முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகோலமாக நடைபெற்றது காலை 9 மணி அளவில் கணபதி பூஜையும், தொடர்ந்து உற்சவர் ஊர்வலத்துடன் விழா ஆரம்பமானது
அடுத்ததாக முருகன் படைகளும் சூரன் படைகளும் மோதிக்கொள்ளும் யுத்தக் காட்சியும், தொடர்ந்து சூரனை முருகன் சம்ஹாரம் செய்வதும் நடந்தது.
சூர சம்ஹார நிகழ்ச்சிக்காக சூரபத்மனின் பல்வேறு முகங்களுடன் கட் அவுட் செய்திருந்தார்கள். கடைசியில் மரமாக உருவெடுக்கும் சூரனை வேல் கொண்டு பிளந்து சேவலாகவும், மயிலாகவும் மாற்றும் காட்சியை தத்ருபமாக செய்திருந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. முருகன் வேடமேற்று சூரனை வதம் செய்த தமிழர் சிறுவன் காண்போரை கண் கவர்ந்தார். பின்னர் வள்ளியாகவும், தெய்வயானையாகவும் இரு சிறுமிகள் வேடமணிந்து முருகனுடன் காட்சியளித்தனர்.
சூர சம்ஹாரம் முடிந்து வள்ளி தெய்வானை சகிதம் ஊர்வலமாக வந்த முருகன் ஆலயத்தில் எழுந்தருளினார். அங்கே பண்டிதர்கள் மந்திரம் முழங்க முருகன், வள்ளி, தெய்வயானை திருக்கல்யாணம் இனிதே நடந்தது
.
தொடர்ந்து மஹாபிரசாதமாக அறுசுவை மதிய உணவு பக்தர்களுக்கு அளிக்கப்பட்டது. இலங்கை தமிழர் பிராத்தனை குழுவினர் இருபது வருடங்களுக்கும் மேலாக சூர சம்ஹார, திருக்கல்யாணத்திற்காக உணவு தயாரித்து கொடுத்து வருவது சிறப்பம்சமாகும். "சூர சம்ஹாரத்தின் போது ஐநூறுக்கும் மேலான பக்தர்கள் வருவது உண்டு. அனைவருக்கும், முதல் வருடத்திலிருந்து தொடர்ந்து உணவளிப்பது இலங்கை தமிழ் பிரார்த்தனை குழுவினர்தான். அவர்களின் சேவை மகத்தானது" என்று அறங்காவலர் திரு.கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார்.
முன்னதாக, அக்டோபர் 27ந்தேதியிலிருந்து கந்த சஷ்டி விரதம் இருந்து பக்தர்கள் முருகனுக்கு ஆராதனை செய்து வந்தார்கள். தினந்தோறும் மூலவருக்கு அபிஷேகம் செய்து, விபூதி, பழங்கள், வெண்ணெய், பூக்கள் மற்றும் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. ஓவ்வொரு நாளும் திரு மகாலிங்கம் சாஸ்திரிகள் அவர்களால் சிறப்புடன் செய்யப்பட்ட முருகனின் வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தை அனைவரும் பாராட்டி பரவசம் அடைந்தார்கள்.
நாள்தோறும் பக்திப்பாடல்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாடினார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை அறங்காவலர் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி யின் ஆலோசனையுடன், முருக சேவகர் சுந்தர்ராஜன் தலைமையில் ரகுநாத் மற்றும் பிரபாகர் அவர்களுடன் ஒருங்கிணைந்து கந்த சஷ்டி குழுவினர் பாலமோகன், குமார் ராம், சரவணன், ரவி ராசப்பன், ரமேஷ் குமரப்பன், மனோகரன், முத்துக்குமரன், குமரவேல், விஜயா, தேன்மொழி, பிருந்தா, சுகன்யா மற்றும் இலங்கை தமிழர் பிரார்த்தனை குழுவை சார்ந்த ரஞ்சன், சரளா, ரேணுகா உள்ளிட்டோர் அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பாக செய்திருந்தனர்.
நூற்றுக்கணக்கான டல்லாஸ் வாழ் தமிழர்கள் குடும்பத்தோடு வந்திருந்து தமிழ்க் கடவுள் முருகனின் சூரசம்ஹாரத்தில் பங்கெடுத்து ஆசி பெற்று சென்றார்கள்.
டல்லஸிலிருந்து நேரடி ரிப்போர்ட்...