ராகு, கேது தலங்களில் மக்கள் பரிகார பூஜை
கும்பகோணம் : திங்கட்கிழமை ராகு,கேது பெயர்ச்சியை முன்னிட்டு திருநாகேஸ்வரம் கீழப்பெரும்பள்ளம் ஆகிய ஊர்களில் ராகுபகவான் , கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பரிகார பூஜைகள் செய்தனர்.
ராகு – கேது பெயர்ச்சி
ராகு, கேது பெயர்ச்சி என்பது குறிப்பிடத்தக்க நிகழ்வாக கருதப்படுகிறது. இவை மிக வலிமையான கிரகங்கள், என்றும் எந்த கிரகத்துடன் சேர்கிறதோ அதன் குணத்தைப் பிரதிபலிக்கும் என்றும் ஜோதிடவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நல்ல கிரகங்களுடன் சேர்ந்தால் நல்ல பலன்களும், கெட்ட கிரகங்களுடன் சேர்ந்தால் கெட்ட பலன்களும் அதாவது மிகப் பயங்கரமான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும். இவை ஒன்றரை ஆண்டுகாலத்திற்கு ஒருமுறை ஒரு கிரகத்தில் இருந்து மற்றொரு கிரகத்திற்கு இடம் பெயர்கின்றன.
அறிவியில் பூர்வமாகப் பார்த்தால் இவற்றை ஆஸ்ட்ரைட்கள் என்று கூறலாம், மற்ற கிரகங்களுடன் சுற்றுப் பாதையில் ஏற்படக் கூடிய துகள்களின் தொகுப்புதான் ராகு, கேது என்றழைக்கப்படும் தூசு மண்டலம்.
எதிர்திசையில் பயணிக்கும் கிரகங்கள்
ராகு, கேது கிரகங்களுக்கென்று தனியாக ஒரு பாதை இல்லை. இவை ஏதோ ஒரு பாதையில் சுழலும், ஒரு முறை எதிர்படும் இந்த கிரகங்கள், ஒரு சமயம் ஒரே பாதையிலும் செல்லும். இதனைத்தான் எதிர்திசையில் பயணிக்கின்றன என்று கூறுகின்றனர்.
இந்த ஆண்டு கர வருடம் வைகாசி மாதம் 2-ம் நாள் 16-05-2011 திங்கட்கிழமை அன்று ராகுபகவான் குருவின் வீடான தனுசை விட்டு விலகி விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இதேபோல் கேதுபகவான் இதுவரை இருந்த புதனின் வீடான மிதுனத்தை விட்டு விலகி ரிஷபத்தில் அமர்ந்துள்ளார்.
ராகு , கேது பெயர்ச்சியை முன்னிட்டு அதனதன் பரிகாரத்தலங்களில் ஏராளமான பக்தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
திருநாகேஸ்வரம் – நாகநாதர் ஆலயம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் ஆலயம் நவக்கிரகத் தலங்களில் ராகு பரிகாரத்தலமாக போற்றப்படுகிறது. இங்கு நடைபெற்ற ராகுபெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ராகுபெயர்ச்சி விழா
மூலவர் நாகநாதசுவாமி எழுந்தருளியுள்ள இந்த சன்னதியில் ராகு பகவானுக்கு தென்மேற்கு மூலையில் தனிசன்னதி அமைந்துள்ளது. நாககன்னி, நாகவள்ளி என இரு துணைவியருடன் மங்கள ராகுவாக திருநாகேஸ்வரத்தில் ராகுபகவான் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகுகாலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிசேகம் செய்து வழிபடுவதை பக்தர்கள் சிறப்பானதாக கருதுகிறார்கள்.
ஒவ்வொரு ஞாயிறன்றும் ராகுகாலத்தில் நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது சிறப்பம்சமாகும்.
பரிகார லட்சார்ச்சனை
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி மாலை 6 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. 15-ந் தேதி 2-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 16-ம் தேதி காலை 9 மணியளவில் யாகசாலை பூஜைகள் தொடங்கின. சரியாக 9.48 மணிக்கு சிறப்பு பாலாபிசேகமும், இதை தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் ராகுபகவான் காட்சியளித்தார்.
காலை 6 மணி முதல் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு ராகுபகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. ராகுபெயர்ச்சியை முன்னிட்டு பரிகார ராசி நேயர்களுக்காக 18- தேதி முதல் வருகிற 20-ந் தேதி வரை 2-ம் கட்ட லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
கீழப்பெரும்பள்ளம் – கேதுபகவான்
ஞானகாரகன் எனப்படும் ஞானத்திற்கு அதிபதியான கேது பகவான் ஒன்றரை ஆண்டு காலத்தில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவார். இதனையொட்டி கேது பரிகார தலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.நாகை மாவட்டம்,பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம், நவக்கிரகத்தலங்களில் கேது பரிகாரத்தலமாக போற்றப்படுகிறது. இங்குள்ள ஸ்ரீ நாகநாத சுவாமி திருக் கோயிலில் கேது பெயர்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது
சிறப்பு அபிஷேகம்
கேது பகவானுக்கு திங்கள்கிழமை காலை 7.15 மணி முதல் சிறப்பு கலச அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.கேது பெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டிய மேஷம்,ரிஷபம், மிதுனம், சிம்மம்,கன்னி,துலாம்,விருச்சிகம்,மகரம்,கும்ப ராசிக்காரர்கள் கேது பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications