சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: கோவை கலெக்டர் அறிவிப்பு
கோவை: சிறுபான்மையின மாணவர்கள் பள்ளிப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளுக்கு உதவித்தொகை வேண்டி விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாநாத் அறிவித்துள்ளார்.
கல்வி உதவித்தொகை
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பயில அரசு ஆண்டுதோறும் உதவித்தொகையினை வழங்கி வருகிறது. சிறுபான்மை மதத்தினராகக் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்ஸியர்கள் மற்றும் புத்த மதத்தினைச் சேர்ந்த மாணவ-மாணவியர்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.
பள்ளிப் படிப்பு
பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் மிகாமல் இருக்கும் மாணவ-மாணவியர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையை புதுப்பித்துக்கொள்ள விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 15. புதியதாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30.
பள்ளி மேற்படிப்பு
பிளஸ் 1, பிளஸ் 2, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் பயிலும் தகுதி வாய்ந்த மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவர்களது பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். முந்தைய ஆண்டு எழுதிய தேர்வுகளில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். புதியதாக விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 30.
இணையதளம்
மாணவ-மாணவியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பணியை எளிதாக்கும் விதமாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. www.tnminoritiesscholarship.in எனும் இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.












Click it and Unblock the Notifications