குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வாழ்வில் ஒளியேற்றுவோம்-ஜெயலலிதா

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குழந்தைப் பருவம் குதூகலமாய், வண்ணத்து பூச்சிகளாய் விளையாடித் துள்ளித் திரியும் காலம். பள்ளி சென்று பயில வேண்டிய காலம். குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து, மேம்படுத்தி அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, பராமரிக்க வேண்டியது நமது கடமை ஆகும்.
நமது நாட்டில் அறிவும், வலிமையும் பொருந்திய தலைமுறையாக உருவாக வேண்டிய ஆயிரக்கணக்கான குழந்தைகள், கடும் உடல் உழைப்பின் சுமையால் நசுக்கப்படுகின்றனர். இக்குழந்தைகளை உடல் உழைப்பின் நிர்பந்தத்தில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு இயல்பான வளர்ச்சியை உறுதி செய்வது நமது தலையாய கடமை ஆகும்.
குழந்தை பருவம் என்பது குழந்தைகளுக்கு இயற்கையாகவே அமைந்திட்ட உரிமையாகும். அந்த உரிமையை அவர்களிடம் இருந்து பறிப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் புறம்பானது என்பதை கருத்திற்கொண்டு, உலகெங்கும் ஜுன் 12-ந் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நாளில் நாம் அனைவரும் நம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப உறுதி ஏற்போம். குழந்தைகள் பணிக்கு செல்வதைக் கண்டால் அவர்களை தடுத்து பள்ளிக்கு அனுப்பி வைப்போம். குழந்தை தொழிலாளர் முறை என்னும் சமூக அவலம் நீக்கப்பட சமுதாயத்தில் உள்ள அனைவரும் உறுதி ஏற்போம்.
தமிழகத்தை குழந்தை தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க தமிழக அரசு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பை நல்கி, தங்கள் ஆதரவினை தர வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். குழந்தை தொழிலாளர் முறை அகற்றிடுவோம். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications