திருச்செந்தூர் கோயிலில் கூடுதல் வாயில்கட்ட தடை-உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கூடுதலாக 2 நுழைவு வாயில் அமைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மகா மண்டபத்தின் தெற்கு பகுதியில் உள்ள நுழைவு வாயில் வழியாக உள்ளே வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஜெயந்திநாதர் சன்னதிக்கு எதிர்புறமும், மகா மண்டபத்தில் உள்ள நடராஜர் சன்னதிக்கு எதிரேயும் 2 நுழைவு வாயில்கள் அமைக்க இந்து அறநிலையத்துறை ஆணையர் கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காயமொழியைச் சேர்ந்த பாலசுப்பிரமணிய ஆதித்தன் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அதில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் தந்திர சமிச்யம் விதப்படி கட்டப்பட்டுள்ளது. கர்ப்ப கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை ஒரே கூரையின் கீழ் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் புதிதாக 2 வாயில்கள் அமைப்பது ஆகம விதிகளுக்கு எதிரானது. இதனால் கோயிலின் தெய்வீக தன்மை பாதிக்கப்படும். இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் பால்வசந்தகுமார், சுப்பையா ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பில் கூடுதலாக 2 வாயில்கள் அமைக்க இடைக்கால தடை விதித்தும், மனுவுக்கு பதில் அளிக்கும்படி அறநிலையதுறை செயலர், ஆணையர், கோயில் நிர்வாக அதிகாரி, அறங்காவலர் குழு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பும்படியும் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications