யுனிகோட் எழுத்துருவில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்க தமிழ் உரிமை கூட்டமைப்பு எதிர்ப்பு
சென்னை: தமிழ் யுனிகோட் எழுத்துருவில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்க தமிழ் உரிமைக் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான பொற்கோ, மா. பூங்குன்றன் உள்ளிட்டோர் கூறுகையில்,
கம்ப்யூட்டரில் உலக மொழிகள் அனைத்தையும் சேர்க்கும் வகையில் யுனிகோடு கன்சார்ட்டியம் என்ற ஒருங்குறி கூட்டமைப்பு என்ற அமைப்பை பன்னாட்டு சாப்ட்வேர் நிறுவனங்கள் ஒன்றுசேர்ந்து ஏற்படுத்தி உள்ளன.
இதில், இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உள்பட மைக்ரோசாப்ட், ஐ.பி.எம். அடோப், கூகுள், யாகூ, ஆரக்கிள் என ஏராளமான நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்கின்றன.
இந்த ஒருங்குறியில் மொத்தம் 11 லட்சத்து 14 ஆயிரத்து 112 இடங்கள் உள்ளன. இவற்றில், உலகின் அனைத்து மொழிகளின் எழுத்துகள், எண்கள், குறியீடுகள் ஆகியவை சேர்க்க இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகள் ஒவ்வொன்றுக்கும் 128 ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த நிலையில், தமிழ் மொழிக்கான ஒருங்குறி இடங்களில், ஜ, ஸ, ஷ போன்ற கிரந்த எழுத்துக்களை சேர்ப்பதற்கு சிலர் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், எ, ஓ, ன, ற, ழ உள்பட 7 தமிழ் எழுத்துக்களை கிரந்தத்தில் சேர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஒரு பொதுவான எழுத்துமுறையாக கிரந்தத்தை மாற்றுவதே நோக்கம் என்று மத்திய அரசு கூறியிருப்பது மொழி ஆதிக்கம் ஆகும். ஒரு எழுத்து முறையை பிற மொழிகளின் மீது திணிப்பது போல் ஆகும். தமிழ் எழுத்துக்களை கிரந்தத்தில் சேர்ப்பது தமிழுக்கு நிச்சயமாக ஆபத்தை விளைவிக்கும்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி எஸ்.மோகன் தலைமையில் ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்திருப்பதை பாராட்டுகிறோம்.
பிப்ரவரி 7-ம் தேதி ஒருங்குறி கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில், கிரந்தம் பற்றிய முடிவை எடுக்கக்கூடாது என்று தமிழக அரசு நேரடியாகவும், மத்திய அரசு மூலமாகவும் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications