மகளிர் தின கொண்டாட்டத்தில் இலங்கை மண்ணை நெற்றியில் பூசிய வைகோ
மதிமுக சார்பில் உலக மகளிர் தினம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு மகளிர் அணி தலைவி குமரி விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அன்மையில் காலமான விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது தஞ்சையைச் சேர்ந்த பத்மாவதி இலங்கை சென்று அவரிடம் ஆசி பெற்றார். நேற்றைய விழாவில் வைகோ பத்மாவதிக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
அப்போது பத்மாவதி தான் இலங்கையில் இருந்து எடுத்து வந்த மண்ணை வைகோவிடம் கொடுத்தார். உடனே அவர் அந்த மண்ணை தன் நெற்றியில் பூசிக் கொண்டார்.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது,
பெண்கள் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் அமெரிக்காவில் பெண்கள் அமைப்பு போராடியது. அந்த நாளை உலக மகளிர் தின விழாவாக கொண்டாடுகிறோம். தமிழக வரலாற்றில் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
டாக்டர் தர்மாம்பாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மாள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோர் பெண்களுக்கு நீதி கேட்டு போராடினார்கள். பெண்கள் உரிமைக்காக சட்டம் இயற்றவும் காரணமாக இருந்தார்கள். இதேபோல் இலங்கையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயாரை சந்தித்து திரும்பிய தஞ்சை பெண் பத்மாவதிக்கும் இன்று பாராட்டு விழா நடந்தது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கடந்த 4 1/2 ஆண்டு ஆட்சியில் 4,787 கொலைகள் நடந்துள்ளன. பெண்கள் கற்பழிக்கப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது. காவல்துறை சீரழிந்து கிடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்க இந்நாளில் நாம் சூளுரை ஏற்போம் என்றார்.