ஐ.ஏ.எஸ். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று பார்வையற்ற தமிழகப் பெண் சாதனை
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெண் சுஜிதா ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ஜெ.சுஜிதா (24). பார்வையற்ற அவர் பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. ஹிந்தி பட்டப் படிப்புகளை படித்துள்ளார். அவருடைய தந்தை நகைக் கடை உரிமையாளர்.
பார்வையில்லாதது ஒரு குறையே இல்லை என்று அவரது தாய் தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறார். அந்த தாய் தான் ஐஏஎஸ் தேர்வு எழுதுவதற்கும் ஊக்கமளித்தார்.
இதையடுத்து சுஜிதா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எக்ஸெல் கேரியர் இந்தியா பயிற்சி மையத்தில் சேர்ந்து தீவிர பயிற்சி பெற்றார். பின்னர் அவர் முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வுக்காக மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி பெற்று அதிலும் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளார்.
இது குறித்து சுஜிதா கூறியதாவது,
என் தாய் தொடர்ந்து ஊக்கமளிப்பது தான் வெற்றிக்கு காரணம். பயிற்சி மையங்களில் மற்றவர்களைப் போலவே நானும் பயிற்சிகளை மேற்கொள்வேன்.
ஆனால், பார்வையற்றவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆடியோ பாடங்கள் தொடர்பாக வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் தீவிர பயிற்சி மேற்கொண்டேன்.
ஆர்வமும், தன்னம்பிக்கையும் இருந்தால் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறலாம். நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை பயிற்சி மேற்கொண்டேன். நேர்முகத் தேர்விலும் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார் நம்பிக்கையுடன்.
விழிகளை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து பீடு நடை போட்டு இன்று உச்சத்தை எட்டியுள்ள சுஜிதாவின், இந்த சாதனை, சாமானியமானதல்ல, மற்றவர்களையும் சாதிக்கத் தூண்டும் மிகப் பெரிய உந்து கோலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications