துபாய் தமிழ்ச் சங்கத்தின் கலக்கல் குடும்பம் 2012
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தின் குடும்ப தின விழா 'கலக்கல் குடும்பம் 2012' எனும் பெயரில் கிரீக் பார்க், குழந்தைகள் நகர அரங்கில் 08.06.2012 அன்று மாலை நடைபெற்றது.நிகழ்ச்சியின் துவக்கமாக அமீரக தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்தினை துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் உற்சாகத்துடன் பாடினர். திருக்குறளை செல்வன். விஜயேந்திரன் அதன் விரிவுரையுடன் வழங்க இன்று ஒரு தகவல் மூலம் குடும்ப உறவுகள் குறித்து செல்வி. ஜனனி கோபாலகிருஷ்ணன் பேசியது அனைவரையும் நெகிழச் செய்வதாக அமைந்திருந்தது.
துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ஜெகநாதன் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து புரவலர்கள் பூங்கொத்து கொடுத்து கௌரவிக்கப்பட்டனர்.
சந்திரா கீதாகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்களது குழந்தைகள் பாடல் நிகழ்ச்சியனை வழங்கினர். தொடர்ந்து திரு. பரிமேமேளழகன், திருமதி. பெட்டினா ஜேம்ஸ், திருமதி. புவனா, திரு. சரவணன், திரு. விஜயேந்திரன், திரு. விஜயராகவன், திரு. கோபாலகிருஷ்ணன், திரு. ராதாகிருஷ்ணன், திரு. பிரசன்னா, திரு. கார்த்திக், திரு. ராஜ்குமார், திரு. சக்ரவர்த்தி, திரு. கல்யாணசுந்தர் ஆகியோரது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கினர். செல்வன். ஆகாஷ் அருள் கீ போர்டு வாசித்தார். திரு. பாலகிருஷ்ணன் மற்றும் திருமதி. கீதா பாலகிருஷ்ணன் ஆகியோர் துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கான வினாடி வினா நிகழ்ச்சியை சிறப்புடன் நடத்தினர்.
நடன நிகழ்ச்சியை கவிதா பிரசன்னாவின் குழுவினரும், குடும்ப நிகழ்ச்சியினை விஜயராகவன் மற்றும் குடும்பத்தினரும் வழங்கினர். சங்கத்தின் இணை பொருளாளர் சுந்தரராஜன் நன்றியுரையாற்றினார்.
நிகழ்ச்சியினை நிறுவனப் புரவலர் ஏ. முஹமது தாஹா, கமிட்டி உறுப்பினர் பாலகிருஷ்ணன், திருமதி. கீதா பாலகிருஷ்னணன், திருமதி. தேவி விஜயராகவன் மற்றும் திருமதி. சந்திரா கீதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தொகுத்து வழங்கினர். இறுதியாக இந்திய தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.