துபாய் தமிழ் சங்கம் சார்பாக காந்தி ஜெயந்தி மற்றும் பாரதியார் விழா

துபாய் தமிழ் சங்கம் சார்பாக காந்தி ஜெயந்தி மற்றும் பாரதியார் விழா கடந்த 5ம் தேதி மாலை கிரீக் பார்க் சிறுவர் நகர அரங்கில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு துபாய் தமிழ் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். அம்ருதா கிரிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
துவக்க நிகழ்ச்சியாக அமீரக தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இன்று ஒரு தகவலை காவ்யா பாபுவும், திருக்குறளையும் அதன் விளக்கத்தையும் சுகன் ராஜ்குமார் மற்றும் தீபக் ஆகியோர் வழங்கினர்.
காந்தி, நேரு, பாரதியார், இந்திரா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வேடத்தில் சிறுவர் மற்றும் சிறுமியர் தோன்றி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
பாரதியார் பாடல்களான ஓடி விளையாடு பாப்பா, சின்னஞ்சிறு கிளியே, மகான் காந்தி மகான், காக்கைச் சிறகினிலே ஆகிய பாடல்களை குழந்தைகள் பாடினர். ஷிரேஷ் கீபோர்டு வாசித்தார். வினாடி வினா, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க ஜனனி கோபாலகிருஷ்ணன், ஸ்ருதி, ஜனனி சுரேஷ், அம்ருதா கிரிவாசன் உள்ளிட்ட சிறுவர், சிறுமியரால் தொகுத்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை முஹம்மது தாஹா, கீதா கிருஷ்ணன், ஜெகநாதன், சுந்தர், பாலா, பிரசன்னா, விஜயேந்திரன், விஜயராகவன் ஆகிய தமிழ் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
அமீரகத்தில் பல்வேறு அமைப்புகள் இருந்தாலும் காந்தி ஜெயந்தி மற்றும் பாரதியார் விழாவை ஆண்டுதோறும் துபாய் தமிழ் சங்கம் மட்டுமே தவறாமல் நினைவு கூர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications