நாரதர் வேடத்தில் பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்மந்தன்

டல்லாஸ் மாநகரில் 2004 ம் ஆண்டு தொடங்கப்பட்ட கோப்பல் தமிழ்க் கல்வி மையம், தமிழர்களின் குழந்தைகள் தங்களின் குடும்பம் மற்றும் உறவினர்களிடன் நல்ல தமிழ் உச்சரிப்புடன் பேசவும் தமிழில் எழுதவும், படிக்கவும் சொல்லித் தரும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
இங்கு தமிழ் நாட்டின் கலை, மற்றும் கலாச்சாரம் தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து வயது முதல் குழந்தைகள் அனுமதிக்கப்படுகிறார்கள். வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெருகிறது. மாணவ மாணவிகளுக்குத் தமிழ் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.
கோப்பல் தமிழ்க் கல்வி மையத்தின் 8வது ஆண்டு விழா ஜூன் 2ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை Medical Centre of Lewisville Grand Theatre ல் நடைபெறுகிறது. விழாவில் நடக்கவுள்ள நாடகத்தில் முனைவர் நாரதர் என்ற வேடத்தில் பேராசிரியர் ஞானசம்மந்தன் நடிக்கிறார்.
அவர் ஏற்கனவே எட்டு நாடகங்களை எழுதி, இயக்கி நடித்துள்ளார் என்பதுவும் பாஞ்சாலி சபதத்தில் ‘சகுனி’ வேடத்தில் நடித்துள்ளார் என்பதுவும் பலருக்கும் தெரியாத ரகசியம். நாடகத்தை தொடர்ந்து கலகலப்பான கலந்துரையாடலும் இடம்பெறுகிறது.
மேலும், தமிழையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், இயல் இசை நாடகத்தின் முக்கியத்துவத்தையும் அமெரிக்க தமிழ் குடும்ப இளைய தலை முறையினருக்கு அறிமுகப்படுத்தி, பாதை அமைத்துத் தரும் நோக்கத்துடன் செயல்படும் டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கத்தின் சார்பில் மாலை 2.30 மணி முதல் 5.00 மணி வரை கருத்தரங்கமும் நடைபெறுகிறது.
ப்ளேனோ 6200, Windhaven Pkwyவில் அமைந்துள்ள பார் நூலகத்தில் 'திரைப்படங்களில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் பேராசிரியர் ஞானசம்மந்தனும், 'இலக்கியமும் கண்ணதாசனும்’ என்ற தலைப்பில் உமையாள் முத்துவும் பேசுகிறார்கள்.
ஒரே நாளில் இரு பெரும் தமிழ் விழாக்களை காணும் வாய்ப்பு பெற்றுள்ள டல்லாஸ் தமிழர்களுக்கு கூடுதல் போனஸாக, கிரேஸி மோகனின் ‘சாக்லெட் கிருஷ்ணா’ நாடகம் மேலும் ஒரு விருந்தாக அமைகிறது.
ஜூன் 10 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வைலி உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் மாலை 2.30 மணி அளவில் நடைபெறும் இந்த நாடகம் 501வது தடவையாக அரங்கேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நாடகத்தின் மூலம் திரட்டப்படும் நிதி இஷா வித்யா திட்டத்தின் மூலம் தமிழக ஊரகப்புற கல்வித்திட்டத்திற்கு செலவிடப்பட உள்ளது. மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கமும் இஷா வித்யாவும் இணைந்து இந்த நாடகத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications