ஆண்டாள் சூடிய மாலைகள் திருமலைக்கு பயணம்: கருடசேவை தினத்தில் பெருமாள் சூடுகிறார்

திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் 5ம் நாளன்று கருடசேவை நடைபெறும். மற்ற நாட்களை விட இந்த நாளில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய திருமலைக்கு வருவார்கள். இந்த ஆண்டு கருடசேவை 22ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக பக்தர்கள் இன்று காலை முதலே குவிந்து வருகின்றனர். நான்காம் நாளான இன்று கற்பகவிருட்ச வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள் புரட்டாசி முதல் சனிக்கிழமையான 22 ம் தேதி கருடவாகனத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்.
அன்றைய தினம் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மூலவருக்கும், உற்சவருக்கும் அணிவிக்கப்படுகிறது.
திருமலைக்கு பயணம்
இந்த நிகழ்ச்சிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலைகள் வியாழக்கிழமை மாலை அனுப்பி வைக்கப்பட்டன. இவை நான்கு மாட வீதிகளையும் வலம் வந்து பின்னர் காரில் கோயில் ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ், கிச்சன் என்ற கிருஷ்ணன் ஆகியோர் மூலம் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிளி, பரிவட்டம், ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை ஆகியவற்றை அனுப்பி வைக்கும் இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழு அலுவலர் சாரா உறுப்பினர் பி.ஆர்.ராமசுப்ரமணிய ராஜா, கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் எஸ்.சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிகளைந்த மாலை,பட்டு வஸ்திரம், இலையால் செய்யப்பட்ட கிளி ஆகியன மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் அணியவும், திருமலை புரட்டாசி பிரம்மோற்சவத்திற்கு 5ம் நாள் கருடசேவையின்போது மூலவரான வெங்கடேசப்பெருமாளும் மோகினி அவதாரத்தில் உற்சவ மூர்த்தியும் ஆண்டாளின் மாலை,புடவை, கிளை ஆகியவற்றை அணிந்து அங்கு திரண்டிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள் தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications