மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு
சென்னை: ஹஜ் பயணிகளுக்கான விண்ணப்பங்கள் வரும் மார்ச் மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை வினியோகிக்கப்படும் என்று இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் ஏ.அபூபக்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஹஜ் பயணம் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் இறுதி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1ம் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் மார்ச் 31ம் தேதி. ஏப்ரல் கடைசி வாரத்தில் பயணத்திற்கான குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே 31ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
நாடு முழுவதும் மொத்தம் 28 மையங்களில் இருந்து செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 20ம் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அக்டோபர் 26ம் தேதி அராபத் நாள். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 1ம் தேதி முதல் டிசம்பர் 10ம் தேதி வரை விமானம் மூலம் நாடு திரும்பலாம்.
ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். எனவே பாஸ்போர்ட் இல்லாதவர்கள், உடனடியாக பாஸ்போர்ட் பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். இந்த தகவலை மாநில முதல்வர்கள் மற்றும் மாநில ஹஜ் கமிட்டி தலைவர்கள் மூலம் ஏற்கனவே அறிவித்துள்ளோம்.
கடந்த ஆண்டை போல 70 வயதை கடந்தவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே இந்த ஆண்டும் பயண அனுமதி வழங்கப்படும். அவருடன் ஒருவர் துணையாக செல்லலாம். தமிழக ஹஜ் பயணிகளுக்கான கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான முயற்சியில் ஈடுபட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி.
கடந்த ஆண்டு 1,28,442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கையினால் ஹஜ் பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15,000 வீதம் மொத்தம் ரூ.193 கோடி மிச்சமானது.
சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் மெக்கா, மெதீனா நகரங்களில் உள்ள விடுதி கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே ஹஜ் பயணிகளுக்கான விமான பயண கட்டணமும் அதிகரிக்கவில்லை.
இந்தியாவில் இருந்து அழைத்து செல்லப்படும் ஹஜ் பயணிகள் தங்குவதற்கு வசதியாக மெக்கா, மெதீனா பெரு நகரங்களில் ஹஜ் இல்லங்களை கட்டுவதற்கு இந்திய ஹஜ் கமிட்டி பரிசீலனை செய்து வருகின்றது. ஒரு முறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளக் கூடாது. இந்த விதிமுறையை மீறுவோரின் பயணம் ரத்து செய்யப்படும்.
எனது வேண்டுகோளை ஏற்று, கர்நாடகாவில் மாநில் ஹஜ் இல்லம் கட்டுவதற்கு மாநில முதல்வர் சதானந்தா கவுடா நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் அடிக்கல் நாட்டு விழா வரும் 15ம் தேதி மதியம் 12 மணிக்கு பெங்களூர் ஹெக்டே நகரில் நடைபெற உள்ளது. அதேபோல, பெங்களூர் தேவனஹல்லி-சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் சாலையில் ரூ.40 கோடி மதிப்பில் 3.17 ஏக்கர் பரப்பளவில் ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. இதன் கட்டுமானத்திற்காக இந்திய ஹஜ் கமிட்டி ரூ.21.2 கோடி வழங்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications