துபாயில் நடந்த நகைச்சுவைத் திருவிழா

இந்த நிகழ்ச்சிக்கு உலக நகைச்சுவையாளர் சங்கத் தலைவர் எம். முகைதீன் பிச்சை தலைமை தாங்கினார். முஹம்மது இத்ரீஸ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
இலங்கை அரசின் இலக்கியத்திற்கான உயரிய விருது பெற்ற காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு சங்க தலைவர் எம். முகைதீன் பிச்சை மற்றும் அமீரக செய்தியாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
அதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய காவியத் திலகம் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்கள் தனது உரையில், அமீரகத்தில் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தாலும் நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இது தான் முதல் தடவை என்றார். அமீரகத்தில் கணவன்மார்கள் அதிகமான நேரம் பணியின் காரணமாக வெளியில் சென்று வந்தாலும் வீட்டினுள்ளேயே அடைந்து கிடக்கும் இல்லத்தரசிகளுக்கும், குழந்தைகளுக்கும் இந்நிகழ்ச்சி ஒரு புத்துணர்வை அளிக்கும் என்பதில் ஐயமில்லை எனக் குறிப்பிட்டு உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் துபாய் கிளையின் பணிகள் சிறப்புற நடைபெற வாழ்த்து தெரிவித்தார்.
துபாய் கிரஸெண்ட் ஆங்கிலப் பள்ளியின் முதல்வர் கலீஃபுல்லாஹ் அவர்கள் தனது வாழ்த்துரையில், நகைச்சுவையின் முக்கியத்துவத்தைப் பற்றியும், குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்கு பேச்சாற்றலின் அவசியத்தைப் பற்றியும் வலியுறுத்திப் பேசினார். மேலும் தனது நகைச்சுவை உணர்வையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது நகைச்சுவை நாடகம் அரங்கேறியது. சௌம்யலட்சுமி பாடல் பாடினார். பலர் தங்களது நகைச்சுவைகளை பகிர்ந்து கொண்டனர். மாணவ, மாணவியர் அதிக அளவில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சங்கத்தின் செயலாளர் எம். கமலக்கண்ணன் நன்றி கூறினார். நகைச்சுவை நிகழ்ச்சிகளை சங்கத்தின் தலைமைப் புரவலர் கே. ஜி. குணா அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகைச்சுவை ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












Click it and Unblock the Notifications