இந்த வயதில் கல்யாணமா?, சான்ஸே இல்லை..!-ஓப்ரா வின்பிரே

ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்கு வந்திருந்தார் ஓப்ரா வின்பிரே. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் மனம் திறந்து பேசினார்.
வின்பிரேவின் பேட்டியிலிருந்து சில துளிகள்...
திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழும் சுதந்திரத்தைக் கொண்டுள்ள நாட்டில் நான் வசிக்கிறேன். திருமணம் செய்வதா, வேண்டாமா என்பதை சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமை அங்குள்ளவர்களுக்கு உண்டு.
இத்தனை காலமாக நான் ஏன் திருமணம் செய்யவில்லை என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. ஒரு வேளை நான் திருமணம் செய்திருந்தால் அவர் நிச்சயம் மிகச் சிறந்த கணவராக இருந்திருப்பார். அதேசமயம், இன்னேரம் நாங்கள் விவாகரத்தும் செய்திருப்போம்- அதையும் நான் சொல்லியாக வேண்டும்.
நான் சுயம் நிறைந்த ஒரு பெண். என்னைப் போல இன்னொருவரைக் காண்பது கடினம். அதை மற்றவர்களிடம் எதிர்பார்க்கவும் முடியாது. மேலும் திருமணம் என்பது ஒரு வகையான கட்டுப்பாடாகவும் மாறி விடுகிறு.
இந்தியாவில் திருமண உறவுகள் மிகச் சிறப்பாக உள்ளது. முதலில் பெற்றோர் பார்த்து கல்யாணம் செய்து வைக்கின்றனர். பின்னர் காதலில் அந்தத் தம்பதிகள் விழுகிறார்கள். பின்னர் வாழ்க்கை இனிமையாகப் போகிறது. மிகவும் அருமையான விஷயம் இது. பாராட்டுக்குரியதும் கூட.
ஆனால் எனக்கு இது சரிப்பட்டு வராது என்றே நினைக்கிறேன். அப்படிப்பட்ட கலாச்சாரத்தில் நான் வளரவில்லை என்பது அதற்குக் காரணமாக இருக்கலாம். மேலும் இப்போது என்னால் திருமணம் குறித்தெல்லாம் நினைக்கவே முடியவில்லை, அந்த வயதைத் தாண்டிப் போய் விட்டேன்.
எனக்கு 30 வயது இருக்கும்போது ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.பிறகு எனக்கு சந்தேகம் வந்து விட்டது. என்னை, அவரால் சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியுமா என்பதே அந்த சந்தேகம். இதனால் அந்தப் பந்தம் பாதியிலேயே முடிந்து போனது என்றார் ஓப்ரா.
கடவுள் குறித்த கேள்விக்கு ஓப்ரா பதிலளிக்கையில்,
வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதமாக நான் நினைப்பது இளம் வயதில் நான் ஏழையாக இருந்ததைத்தான். எனது பாட்டிக்கு அப்போது இருந்த பெரிய கவலையே, நான் என்னை மதிக்கக் கூடிய ஒருவர் வீட்டுக்கு வேலைக்காரியாகப் போக வேண்டுமே என்பதாகத்தான் இருந்தது. அவர்தான் எனக்கு கடவுள் நம்பிக்கையை ஊட்டியவரும் கூட. நானும் கடவுளை நம்பினேன், எனது தந்தையாக கடவுளை கருதினேன் -காரணம் எனது தந்தை யார் என்று எனக்குத் தெரியாது என்பதால். கடவுளுக்கும், எனக்கும் இடையே நெருங்கிய பந்தம் உண்டு. அதை நான் எப்போதும் பேணிக் காத்து வருகிறேன் என்றார் ஓப்ரா.












Click it and Unblock the Notifications