துபாயில் இந்திய சமூக நல மையக் கூட்டம்

இந்திய சமூக நல மையக் கூட்டத்திற்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது பணிகளில் ஒத்துழைப்பு நல்கிவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் இந்திய சமூக நல மையம் மேற்கொண்டு வரும் அனைத்து சமூக நலப் பணிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
இந்திய சமூக நல மையத்தின் (INDIAN COMMUNITY WELFARE COMMITTEE - ICWC ) கன்வீனர் கே. குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரி முதல் இந்திய சமூக நல மையம் மேற்கொண்டுள்ள பல்வேறு பணிகளைப் பட்டியலிட்டார். மேலும் இம்மையம் மூலம் மேற்கொண்டு வரும் பொருளாதார உதவிகள் குறித்தும் விவரித்தார்.
இதற்காக நன்கொடைகளை வழங்கி வரும் தொழில் அதிபர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து புகையிலை எதிர்ப்பு தினம், சாலையைக் கடக்கும் போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த குறும்படக் காட்சிகள் இடம்பெற்றன.
துபாய் அரசின் அங்கீகாரத்தை அனைத்து சங்கங்களுக்கும் பெற்றுத் தருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் இந்திய கன்சுலேட் உயர் அதிகாரிகள், இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான்), இந்தியன் சார்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா, கே.எம்.சி.சி., ஹமாரி அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications