மாசி மகத்தில் புனித நீராடினால் பாவத்தை தீர்க்கலாம்!

மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராட ஏற்ற புனித மாதமாகும். இருப்பினும் மாசிமகத்தன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பிரதான வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. இங்குள்ள தீர்த்தம் மகாமகத் தீர்த்தம். காசியில் ஓடும் புனித கங்கையும் தன் பாவம் தீர நீராடும் குளம் இது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமை பெற்ற தலம். கும்பகோணம் மகாமகக்குளத்தை மேலிருந்து பார்த்தால் குடம்போல காட்சியளிக்கும். இக்குளத்தில் புனித நீராடினால் அமுதக் குடத்திற்குள்ளேயே நீராடியது போலாகும். எனவேதான் மகம் நட்சத்திரத்தன்று அனைவரும் புனித நீராடுகின்றனர்.
பத்துநாள் திருவிழா
கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசி மகப் பெருவிழா பத்துத் தினங்கள் வரை நடைபெறுகிறது. இதனை யொட்டி பிப்ரவரி 27 ம் தேதி அசுவினி நட்சத்திர நாளில் கொடி ஏற்றப்பட்டது. திருவிழாவின் எட்டாவது நாளான திங்கட்கிழமையன்று தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமான தீர்த்தவாரி திருவிழா பத்தாம் நாளான மகம் நட்சத்திரமான இன்று நடைபெறுகிறது. இதனையொட்டி கும்பகோணம் ஆலயங்களில் உள்ள பஞ்சமூர்த்திகளும் புறப்பட்டு மகாமக தீர்த்தக் குளத்தில் எழுந்தருளியுள்ளனர். சுவாமிகள் தீர்த்தவாரி முடிந்தவுடன் புனித நீராடுவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
மகா மகம் பெருவிழா
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாசி மகம் நாளில் குரு, சிம்ம ராசியிலும் சூரியன், கும்ப ராசியிலும் வரும். அந்நாளே மகாமகப் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மகாமக திருவிழாவை முதலில் துவக்கி வைத்தவர், பிரம்மதேவன். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் புனித நதிகள் யாவும் வந்து கலப்பதாகவும், அன்று புனித நீராடினால் புண்ணியப்பேறுகள் பலவும் கிட்டும் என்றும் மகாபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ராமர், ராவணனை வதம் செய்வதற்காக சிவனருள் பெற வேண்டி, அகத்திய முனிவரின் ஆலோசனையை நாடினார். அம்முனிவர், கும்பகோணம் வந்து சில காலம் தங்கி இத்தலத்திலுள்ள காசி விஸ்வேசுவரரை வழிபட்டால் உருத்திராம்சம் பெறலாம் எனக்கூறினார். அதன்படி ராமர் இங்கு வந்து விஸ்வேசுவரரை வழிபட்டார்.
உலகை காத்த சிவன்
ஒரு சமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த வேளையில், மீண்டும் உயிர்களை படைப்பதற்கான பீஜம் தாங்கிய அமுத கும்பத்தை பிரம்மா நீரில் மிதக்க விட்டார். அது வெள்ளத்தில் மிதந்து ஒதுங்கிய இடமே கும்பகோணம். வேடனாக வந்த சிவபெருமான், திருவிடைமருதூரில் தங்கினார். பாணம் ஒன்றை எடுத்து குடத்தைக் குறிவைத்தார். பாணம் எய்த இடம் பாணாத்துறை ஆயிற்று. இவ்வூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கே உள்ளது. குடம் உடைந்து ஐந்து இடங்களில் சிதறியது. வடமேற்கே சுவாமிமலையிலும், தென்மேற்கே தாராசுரத்திலும், தென்கிழக்கே திருநாகேஸ்வரத்திலும், கிழக்கே திருவிடைமருதூரிலும், வடகிழக்கே கருப்பூரிலும் அமுதம் சிதறி விழுந்தது. இத்தலங்களை "பஞ்சகுரோசத் தலங்கள் என்று குறிப்பிடுவர். "குரோசம் என்றால் "கூப்பிடு தூரம். அருகருகே இந்த தலங்கள் உள்ளதால், இப்பெயர் பெற்றன.
குந்தியின் பாவம் நீங்கியது
திருமணமாவதற்கு முன் சூரியன் மூலமாக கர்ணனைப் பெற்ற குந்திதேவி, குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள். அந்தப் பாவம் அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நாள் ஒரு முனிவரைச் சந்தித்த குந்தி, கர்ணனை ஆற்றில் விட்ட பாவம் நீங்க பரிகாரம் கேட்டாள். அதற்கு முனிவர், மாசி மகம் அன்று ஏழு கடலில் நீராடினால் பாவம் விலகும் என்றார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல்களில் நீராட முடியும்? என்று இறைவனை வேண்டினாள் குந்தி. அப்போது, திருநல்லூர் கோயில் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதில் உனக்காக ஏழு கடல் தீர்த்தங்களை வரவழைக்கின்றேன். அந்தத் தீர்த்தத்தை ஏழு கடலாக நினைத்து மாசி மகம் அன்று நீராடு! என்று அசரீரி கேட்டது. குந்தியும் அப்படியே செய்து விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தமே சப்த சாகர தீர்த்தம் ஆகும். எனவே நாம் அறிந்தும் அறியாமலும் எந்தப் பிறவியிலாவது பாவம் செய்திருந்தாலும் மாசி மகம் தினத்தன்று அருகில் உள்ள நீர் நிலைகளில் புனித நீராடினால் பாவம் தொலையும் என்கின்றனர் நம் முன்னோர்கள்.












Click it and Unblock the Notifications