எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: மஸ்கட் தமிழ் சங்கம் கௌரவிப்பு
மஸ்கட்: மஸ்கட் தமிழ்ச் சங்கம் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது.

பிரபல பின்னணி பாடகர் விஜய் பிரகாஷ், பாடகிகள் அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன் ஆகியோர் சென்னை 'சாதகப் பறவைகள்' இசைக் குழுவினருடன் இணைந்து வழங்கிய நான்கு மணி நேர திரை இசைப் பாடல்கள் நிகழ்ச்சி பார்வையாளர்களை இசைக் கடலில் ஆழ்த்தியது.
விஜய் டி.வி புகழ் திவ்யதர்ஷனி தனது அழகான பாணியில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் நிக்ழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
மெல்லிசை மன்னருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தபோது எம்.எஸ்.வி அவர்கள் தனக்கே உரிய பணிவுடனும், பாங்குடனும் மக்களைப் பார்த்து கையசைத்து விருதினைப் பெற்றுக் கொண்டது பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. தலைமுறைகளைக் கடந்து சாதனைகளைக் குவித்த எம்.எஸ்.வி என்ற இசை மேதைக்கு அனைவரும் மனதார தங்கள் மரியாதையையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
மெல்லிசை மன்னர் அவர்கள் தொடர்ந்து 'சம்போ சிவ சம்போ' என தனது குரலால் கம்பீரமாகப் பாட அனைவரும் அந்த இசை வேந்தருக்கு கைதட்டி ஆரவாரம் செய்தனர். விஜய் பிரகாஷ் மற்றும் அனுராதா ஸ்ரீராம் பாடல்கள் பார்வையாளர்களை இருக்கையை விட்டு எழுந்து நடனம் ஆடச் செய்தது. ஸ்வேதா மோகன் தனது இசையால் பார்வையாளர்களை மகிழ்வித்தார்.
முன்னதாக தமிழ் வகுப்பு மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. சங்கத்தின் கலாச்சார மற்றும் இலக்கியச் செயலாளர் திரு. பஷீர் முகமது அவர்கள் நிகழ்ச்சித் தொகுப்புரையாற்றினார். தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. ஜானகிராமன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். துணைத் தலைவர் திரு. அகமத் ஜமீல் வரவேற்புரையாற்ற, பொருளாளர் திருமதி. விஜயலக்ஷ்மி நன்றியுரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications