ஷார்ஜாவில் 31வது பன்னாட்டு புத்தகக் கண்காட்சி: அருந்ததி ராய் பங்கேற்பு
ஷார்ஜா: ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி கடந்த 7ம் தேதி மாலை துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
31வது ஆண்டாக நடைபெற்று வரும் இக்கண்காட்சியினை ஷார்ஜா ஆட்சியாளர் ஷேக் சுல்தான் துவக்கி வைத்தார். இக்கண்காட்சியில் ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, ஓமன், பாகிஸ்தான், எகிப்து, சிரியா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரபி, ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்களை காட்சிக்கு வைத்துள்ளன.

இவ்வாண்டு இந்தியாவைச் சேர்ந்த நேஷனல் புக் டிரஸ்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளன. பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வமுடன் கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
குழந்தைகளைக் கவரும் வகையில் பெயிண்ட்டிங் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் தினமும் கருத்தரங்குகள், சமையல் போட்டிகள் உள்ளிட்டவையும் நடைபெறுகின்றன. இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய், சேது உள்ளிட்ட பலரும் இக்கருத்தரங்குகளில் பங்கேற்றனர். இந்த கண்காட்சி வரும் 17ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications