துபாயில் 'குறைந்துபோன கடிதப் பழக்கம்' நூல் வெளியீட்டு விழா

தமிழ்த்தாய் வாழ்த்தினை திருமதி.ஜெயா பழனி பாடிட நிகழ்ச்சி இனிதே துவங்கியது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் முத்துப்பேட்டை ஷரிபுத்தீன் வரவேற்க ஹெல்த் கணேசன் தலைமையேற்று உரையாற்றியபோது, உடல் நலம் பேணுதலின் அவசியத்தை நாம் யாவரும் உணர வேண்டும். அந்த விழிப்புணர்வு ஒன்று தான் நமது வாழ்க்கையைச் சிறப்பாக்க வழிவகுக்கும் என்றார்.
சிறப்பு விருந்தினராக திரைப்படப் பாடலாசிரியர் முனைவர் கவிஞர் ரவிபாரதி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். தமிழின் பெருமைகள் பற்றியும், கர்மவீரர் காமராசர் பற்றியும், கவியரசு கண்ணதாசன் படைப்புகள் பற்றியும் தனது அனுபவத்தோடு கலந்து வழங்கி அனைவரையும் கவர்ந்தார். துபாய் போன்ற ஒரு தேசத்தில் இதுபோன்ற தமிழ் அமைப்புகள் செயல்படுவதோடு, மாதந்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகளும் கவியரங்கங்களும், சிறப்பிதழ்களும் வெளியிடப்படுவது பெருமைக்குரிய சேவை என்றும் இது தொடர்பாக உழைத்து வரும் அனைத்து நிர்வாகக் குழுவினருக்கும், அமைப்பின் உறுப்பினர்களுக்கும் தனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாகக் கூறினார். இப்படி நடக்கும் இனிய தமிழ் விழாக்களுக்கு இதயம் உவந்து பொருளுதவி தருகின்ற சிவஸ்டார் பவன் உரிமையாளர், வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் திரு.கோவிந்தராஜ் அவர்களை நீடுழி வாழ்க என்று வாழ்த்தினார்.
இன்றைய தினம் நூல் வெளியிட்டிருக்கும் இளையவர் திரு. ஜெயராமன் ஆனந்தி அவர்களது படைப்பாற்றல் இன்னும் வளர்ந்து பல நூல்கள் படித்து மென்மேலும் சாதனைபுரிய வாழ்த்துவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யு.ஏ.ஈ. தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.ரமேஷ் விஸ்வநாதன் அவர்கள், வானலை வளர்தமிழுக்கும் அது ஆற்றிவரும் தொண்டிற்கும் தனது நெஞ்சில் என்றும் ஒரு சிறப்பிடம் உண்டு என்றும் இந்த அமைப்பு இன்னும் வளர தன்னால் ஆன அனைத்து உதவிகளையும் செய்யத் தயார் என்றும் தெரிவித்ததோடு தியாகம் மற்றும் பிறந்தநாள் தலைப்புகளில் எழுதிவந்த கவிதைகளை வழங்கி அனைவரது பாராட்டையும் பெற்றார்.
விழாவில் விருதை மு.செய்யது உசேன், திண்டுக்கல் ஜமால், காவிரிமைந்தன், முகவை முகில், ஜெயாபழனி, வெற்றிவேல் செழியன், முதுவை ஹிதாயத்துல்லா, கிளியனூர் இஸ்மத், யமுனா லிங்கம், பொற்செல்வி கண்ணன், ஆதிபழனி, ந.அழகப்பன், விவேகானந்தன், சுந்தர் மற்றும் பலர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
ரவிபாரதி அவர்களுக்கு ரமேஷ் விஸ்வநாதன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். அவருக்கு நினைவுப்பரிசினை கிளியனூர் இஸ்மத் அவர்களும், ரமேஷ் விஸ்வநாதன் அவர்களுக்கு நினைவுப்பரிசை முத்துப்பேட்டை ஷரிபுத்தீன் அவர்களும் வழங்கினார்கள்.
'குறைந்து போன கடிதப் பழக்கம்' கவிதை நூலின் முதல் பிரதியை ரவிபாரதி வெளியிட கவிஞர் யமுனாலிங்கம் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை ரமேஷ் விஸ்வநாதன் வெளியிட முகவை முகில் அவர்களும் மூன்றாம் பிரதியை திருமதி. பொற்செல்வி கண்ணன் வெளியிட திருமதி. கவிதா அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.
நூலாசிரியர் கவிஞர் ஜெயராமன் ஆனந்தி அவர்களுக்கு வானலை வளர்தமிழ் சார்பில் ரவிபாரதி பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் சார்பில் கவிஞர் காவிரிமைந்தன் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். நூலாசிரியருக்கு நினைவுப் பரிசினை விமல்ராஜ் வழங்கினார்.
ஏற்புரையாற்றிய கவிஞர் ஜெயராமன் ஆனந்தி, தான் கடந்து வந்த பாதையையும் அதில் தனக்கு உற்சாகமும் உத்வேகமும் தந்து கவிதை இயற்றும் ஆற்றலை வளர்த்து தந்த அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றியை உணர்வு பொங்கக் குறிப்பிட்டார். இந்த நூல் வெளிவருவதற்கு முழுக் காரணமான திரு.கோவிந்தராசு அவர்களுக்கு தான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகத் தெரவித்தார்.
அடுத்த மாதத் தலைப்புகளான 'அலைகள்' மற்றும் 'கலைகள்' ஆகிய தலைப்புகளில் கவிதைகளை 10 நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
விழாவின் தொடக்கத்தில் வானுக்குத் தந்தையெவனோ என்கிற திரைப்பாடலையும் விழா நிறைவுறும்போது நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு என்கிற பாடலையும் திரு.பீர் முகம்மது அவர்கள் இனிய குரலில் பாடி விழாவிற்கு மற்றுமொரு சுவை சேர்த்தார்.
அமைப்பின் ஆலோசகர் கவிஞர் காவிரிமைந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திண்டுக்கல் ஜமால் நன்றியுரையாற்றிட விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பின் தலைவர் கோவிந்தராஜ், காவிரிமைந்தன், ஜியாவுதீன், கீழைராஸா, சிம்மபாரதி மற்றும் ஆதிபழனி, ஜெயராமன் ஆனந்தி ஆகியோருடன் இணைந்து முதுவை ஹிதாயத்துல்லா மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications