திருச்செந்தூர் மாசி திருவிழா - நாளை தேரோட்டத்தை காண குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழாவில் நாளை (மார்ச் 6ம் தேதி) தேரோட்டம் நடைபெற உள்ளது. தோரோட்டத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாசி திருவிழா கடந்த மாதம் (பிப்ரவரி) 26ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறகக்ப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்பரூபம் தீபாராதணை, 2 மணிக்கு அபிஷேகம், காலை 5.30 கொடியேற்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இத்திருவிழா வரும் 8ம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும்.
இத்திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகின்றது. மாசி திருவிழாவின் முக்கிய நாட்களான 5ம் நாள் இரவு குடவருவாயில் தீபாராதனையாகி சுவாமி, அம்பாள் தங்க மயில் வாகனங்களில் உலா வந்தனர்.
கடந்த 3ம் தேதி (7ம் திருநாள்) சண்முக பெருமான் உருகு சட்டசேவைக்கு பிறகு சண்முக விலாசத்தில் இருந்து வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, மாலை தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி திருக்கோலத்தில் அருள்பாலித்தார்.
திருநாளின் 8வது நாளான நேற்று சுவாமி ஆறுமுகநயினார் பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி எழுந்தருளினார். காலை 11.15 மணிக்கு மேல் சுவாமி ஆறுமுகநயினார், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
திருநாளின் 9வது நாளான இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
நாளை காலையில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் காலையில் நடைபெறுகின்றது. காலை 7.30 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றது. சுவாமி பெரிய தேரிலும், அம்பாள் சிறிய தேரிலும் ரத வீதிகளில் வலம் வருவார்கள்.நாளை நடைபெறும் தேரோட்டத்தை காண தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், திருச்செந்தூர் நகருக்கு வந்து தங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications