துபாயில் நடந்த வானலை வளர்தமிழின் இலக்கிய கூட்டம்
தமிழ்த்தாய் வாழ்த்தினை நிவேதிதா பாட நிகழ்ச்சி இனிதே துவங்கியது. மகளிர் தினத்தை முன்னிட்டு கவியரங்கிற்கு ஜெயா பழனி தலைமையேற்று நடத்தினார். இதில் ஜியாவுதீன், புதுவை ரமணி, காவிரி மைந்தன், நிவேதிதா, ஜெயா பழனி, குத்புதீன் ஐபக், விருதை மு.செய்யது உசேன் ஆகியோர் கவிதை பாடினர். அடுத்த மாதத் தலைப்பான ‘பூ’ என்கிற தலைப்பில் சிறப்புக் கவிதையினை அதிரை இளைய சாகுல் வாசித்தார்.
முத்துப்பேட்டை அ.சர்புதீன், குற்றாலம் அஷ்ரப் ஆகியோர் தங்கள் பேச்சாற்றலால் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். காதர் மைதீன் அவர்கள் தனது இனிய குரலில் பாடல் பாடினார். தென்னகத்தின் பி.எச். அப்துல் ஹமீது என்று கருதப்படும் தஞ்சை பேசில் ராஜா தனது சிறப்பான குரல்வளத்தால் அனேக அபிமான அறிவிப்பாளர்களின் குரல்களில் வழங்கிய பல்குரல் விருந்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. குறிப்பாக அமைப்பின் தலைவர் எல்.கோவிந்தராஜ் பலகுரல் மன்னன் பேசில் ராஜாவை மனமாரப் பாராட்டினார்.
கீழக்கரை நாசர் ஷுஐபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழத்தினார். அவர் தனது உரையில், தமிழின் சுவையை தம் கவிதை நடையில் வழங்கி அனைத்துக் கவிஞர்களின் கவிதைகளிலும் உள்ள நயங்களை எடுத்துரைத்து குறைகளையும் சுட்டிக்காட்டி அவற்றைக் களைவது எளிதென்றும் குறிப்பிட்டார்.
அவருக்கு வானலை வளர்தமிழ் தலைவர் எல்.கோவிந்தராஜ் பொன்னாடை அணிவிக்க, நினைவுப் பரிசினை இணைச் செயலாளர் ஜியாவுதீன் வழங்கினார். கவியரங்கிற்கு தலைமை வகித்த ஜெயா பழனிக்கு கீழக்கரை நாசர் ஷுஐபு நினைவுப் பரிசு வழங்கினார். ஒவ்வொரு இதழையும் தன் உழைப்பால் மெருகேற்றி வடிவமைக்கும் பொறுப்பாசிரியர் ஜியாவுதீனுக்கு எல்.கோவிந்தராஜ் நினைவுப் பரிசு வழங்கி கெளரவித்தார்.
நிகழ்ச்சியில் முதலில் மனசு இதழ் வெளியிடப்பட்டது. இதழின் முதல் பிரதியை ஜெயா பழனி வெளியிட குத்புதீன் ஐபக் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை காத்தீம் நிசா வெளியிட ஜாபர் அலி பெற்றுக்கொண்டார். மூன்றாம் பிரதியை பல்கீஸ் வெளியிட சாகுல் பெற்றுக் கொண்டார்.
ஆற்றல் இதழின் முதல் பிரதியை கவிஞர் நாசர் ஷுஐபு வெளியிட அப்துல் ரகுமான் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை தலைவர் கோவிந்தராஜ் வெளியிட விமல் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை குற்றாலம் அஷ்ரப் வெளியிட வாணி ஆனந்தன் பெற்றுக் கொண்டார்.
புதுவை ரமணி நன்றியுரையாற்றினார். அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். காவிரிமைந்தன், ஜியாவுதீன், சிம்மபாரதி, ஆதிபழனி மற்றும் புதுவை ரமணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.













Click it and Unblock the Notifications