24 மணி நேரமும் இலவச ரத்ததானம்: இந்தியன் பில்லர்ஸ் ஏற்பாடு
தர்மபுரி: தமிழகத்தில் இந்தியன் பில்லர்ஸ் என்ற அமைப்பு 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு இலவச ரத்தம் வழங்க முன் வந்துள்ளது.
விபத்து காலங்கள் மற்றும் பிரசவ காலங்களில் பெரும்பாலும் ரத்த இழப்பு காரணமாக உயிர் இழப்பு ஏற்படுகிறது. பாதிக்கப்படுவர்களுக்கு தேவையான ரத்தம் வழங்க பலர் இருப்பினும் குறிப்பிட்ட நேரத்தில் ரத்தம் கிடைப்பதில்லை. இதனால் சில நேரங்களில் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றது.
ரத்தத்தை குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே சேமித்து வைக்க முடியும் என்பதால், ரத்த தானம் செய்வோர் அதிகம் இருந்தாலும் ரத்தத்தை சேமிக்க முடியாத நிலை உள்ளது.
இதை பயன்படுத்தி பல தனியார் ரத்த வங்கிகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரத்தத்தை கொள்ளை லாபம் வைத்து விற்பனை செய்கின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் இந்தியன் பில்லர்ஸ் என்ற அமைப்பு 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு இலவச ரத்தம் வழங்க முன் வந்துள்ளது.
இது குறித்து இந்தியன் பில்லர்ஸ் தலைவர் வினோத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எங்களிடம் ரத்தம் தானம் செய்ய விரும்பும் 60,000 பேரின் பட்டியல் உள்ளது. அவர்கள் எந்த நேரத்திலும் ரத்ததானம் செய்ய தயாராக உள்ளவர்கள். தமிழகத்தில் எந்த பகுதியில் இருந்து ரத்தம் தேவை என்றாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். ரத்தம் தேவைப்படுவோர் 94888 48222 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு நோயாளிகள் விவரம், ஊர், தேவைப்படும் ரத்த வகை உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு தெரிவித்தால் உடனே அந்த ஊருக்கு அருகில் உள்ள ரத்த தானம் செய்வோரை தொடர்பு கொண்டு ரத்தம் வழங்க ஏற்பாடு செய்வோம். இது முழுக்க முழுக்க இலவச சேவையாகும். இந்த சேவைக்கு டோல்ப்ரீ எண் அரசு வழங்கினால், தொடர்பு கொள்வோருக்கு வசதியாக இருக்கும் என்பதால் இது குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அரசு விரைவில் அனுமதி வழங்கும் என நம்புகின்றோம் என்றார்.












Click it and Unblock the Notifications