குட்டிப்பா… புஜ்ஜிம்மா… ரொமான்ஸ் ஆக கொஞ்சுங்களேன்… அன்பு அதிகமாகும்!
செல்லப் பெயர் வைப்பதில் கூட ஒரு கலைநயம் இருக்க வேண்டும். அதிலும் உயிரைத் தொட்டு இதயத்தை இளக வைக்கும் வகையில் அந்தப் பெயர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பெயர்களைச் சொல்லும்போது ஜில்லென்று இருக்கும்.
உருகி உருகி கொஞ்சுங்கள்...
காதலியைக் கொஞ்சுவதில் ஒவ்வொரு காதலனுக்கும் ஆசை அதிகமாக இருக்கும். விதம் விதமாக பெயர் வைத்து உருகுவார்கள், கிறங்குவார்கள். என் பட்டு, என் செல்லம் என்று தொடங்கி விதம் விதமாக பெயர் சூட்டலாம். பேபிமா,ஸ்வீட்டி, ஹனி என்று கூப்பிடுவது பலரிடம் புழக்கத்தில் உள்ளது.
காதலியின் குரல் ஸ்வீட்டாக இருந்தால் அதை வைத்து ஆயிரம் பெயர் சூட்டுவார்கள் காதலர்கள். என் அச்சு வெல்லமே என்று ஆரம்பித்து சக்கரைக் கட்டியே என்று தொடங்கி உருகி ஓடுவார்கள்.
கண்கள் மீனம்மா....
சிலர் தங்களுக்குப் பிடித்த உறுப்புகளை சுட்டிக் காட்டும் வகையில் பெயர்களைச் சூட்டி கூப்பிட்டு மகிழ்வார்கள். சிலருக்கு கண்கள் பிடிக்கும், அப்படிப்பட்டவர்கள் என் மீனம்மா என்று கொஞ்சுவார்கள். சிலருக்கு காது பிடித்திருக்கும், அதை வைத்து என் பிஞ்சுக்காதழகியே என்று கொஞ்சி காதில் கிசுகிசுத்து முத்தமும் கொடுப்பார்கள்.
சிலருக்கு காதலியின் மூக்கு பிடித்திருக்கும். அப்படிப்பட்டவர்கள் என் இனிய குடை மிளகாயே என்று வர்ணிப்பார்கள். சிலருக்கு கண் பிடிக்கும், முண்டக்கண்ணி, மீன் குட்டி என்று கொஞ்சுவார்கள்.
ரொமான்ஸ் அதிகமாகும்
சிலர் ஒட்டுமொத்தமாக விதம் விதமாக செல்லப் பெயரிட்டு கொஞ்சி மகிழ்வார்கள். நடக்கும் நிலவே, காதல் தேவதையே, இதய நிலாவே, பட்டுக் குட்டி, செல்லம்மாவே, தேன் மொழியே, சாரல் மழையே, தங்கப் பொண்ணே, வெல்ல கட்டியே என்று வாய் வலிக்க வலிக்க கொஞ்சித் திளைப்பார்கள். சிலர் புஜ்ஜிம்மா... குட்டிம்மா... என்றும் கூப்பிட்டு மகிழ்வார்கள். இதுபோன்ற செல்லப்பெயர்களினால் காதலர்களிடையேயும், தம்பதியர்களிடையேயும் அன்பு ப்ளஸ் ரொமான்ஸ் அதிகமாகும் என்கின்றனர் அனுபவசாலிகள்.
கண்ணுக்குட்டி... மொசக்குட்டி
சில ஆண்கள் கருப்பாக இருப்பார்கள். ஆனால் அவர்களின் மேனரிசம் மனைவிக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் சிரிப்பு, மீசை ஏதோ ஒன்றை காரணமாக வைத்து கொஞ்சுவார்கள். பெண்கள் அதிகம் கணவர்களை கொஞ்சுவது கண்ணுக்குட்டி, அல்லது மொசக்குட்டி என்றுதானாம்.
சிலர் சிரித்தாலே அள்ளிக்கொள்ளும் பளிச்சென்ற பற்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கும். அதை வைத்தும் பல்லழகா... என்று படக்கென்று பெயர்வைத்து கொஞ்சுவார்கள்.
என் ரட்சகனே!
சில பெண்கள் தங்கள் கணவரை தெய்வமாக நினைக்கின்றனர் ( இன்றைக்கும் சில பெண்கள் செல்போனில் கணவரின் நம்பர்களுக்கு சாமி என்று போட்டு வைத்திருக்கின்றனர்) அவர்கள் கொஞ்சுவதும், கூப்பிடுவதும் ஏஞ்சாமி... என்றுதான். சில ஆண்கள் தங்களின் மனைவியை ஏன் தாயி.... என்றும் ஆசையாக கூப்பிடுவார்கள்.
இப்படி பெயர் சூட்டி கொஞ்சி மகிழ்வது அன்பின் வெளிப்பாடு, பாசத்தின் வெளிப்பாடு. இப்படிக் கூப்பிடும்போது நமக்குள் காதலும், அன்பும் அதிகரிக்கிறதாம்..
உங்க வீட்ல நீங்க எப்படிக் கொஞ்சுவீங்க...