புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மு.இளங்கோவனின் 2 நூல்கள் வெளியீடு
புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பணியாற்றும் முனைவர் மு.இளங்கோவனின் செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல் மற்றும் கட்டுரைக் களஞ்சியம் ஆகிய இரு நூல்களின் வெளியீட்டுவிழா, புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
ஜூலை 3ம் தேதி இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுவை சட்டசபை சபாநாயகர் வ. சபாபதி (எ) கோதண்டராமன் கலந்து கொண்டு விழாவுக்குத் தலைமை தாங்கி நூல்களை வெளியிட்டார்.
நூலின் முதற்படிகளைப் புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் வி.முத்து, புதுவைப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பதிவாளர் ப.வைத்தியநாதன், சென்னையைச் சேர்ந்த சோழன் க.குமார்ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

சபாநாயகர் வ.சபாபதி ஆற்றிய தலைமையுரையில், மனிதர்களை அறிவுடையவர்களாக மாற்றுவது நூல்கள் என்றும், நூலாசிரியர்களின் மறைவுக்குப் பிறகும் நூல்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
திருவள்ளுவர் இறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அவர் இயற்றிய திருக்குறள் நமக்கு வழிகாட்டியாக விளங்குகின்றது. எனவே தரமான நூல்கள் வெளிவர வேண்டும் என்று குறிப்பிட்டு நூலாசிரியர் மு.இளங்கோவன் இளம்வயதில் பல நூல்களை வெளியிட்டுள்ளதைப் பாராட்டிப்பேசினார்.
பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன், பேராசிரியர்சு.வரலட்சுமி, முனைவர் அரங்க.பாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நூலினை மதிப்பீடு செய்து பேராசிரியர் இராச.குழந்தைவேலனார் உரையாற்றினார்.
புதுச்சேரி அரசின் மின்துறை, கல்வித்துறை அமைச்சர் தி.தியாகராசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புதிய தமிழ் இணையதளத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
புதுவை மாநிலத்தின் வரலாற்றில் இந்த நாள் ஒரு பொன்னாள். தகவல் தொழில்நுட்ப உலகிற்குத் தக்கவாறு பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இன்று முதல் ஆண்டிராய்டு அப்ளிகேஷனில் அனைவரும் தரவிறக்கிப் பயன்படுத்த இலவசமாக வழங்கப்படுகின்றது. இதனை உலகிற்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன் என்றார்.

மேலும் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்வெளிவந்த பாவேந்தர் பாரதிதாசன் நூல்களை மின்பதிப்பாக இணையதளத்தில் வெளியிடுவதிலும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த நூல்களை ஆய்வாளர்களும் தமிழ் ஆர்வலர்களும் தங்கள் கணினிகளில் சேமித்துப் பயன்படுத்தலாம். தமிழுக்குப் பயன்படும் நூல்களையும் வரலாற்றுக் குறிப்புகளையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் தி.தியாகராசன் அவர்கள் பேசினார்.
அமைச்சர் தொடங்கி வைத்த புதிய தமிழ் இணையதளத்தில் தமிழறிஞர்களின் வாழ்க்கைவரலாறு, இசைப்பாடல்கள், புகைப்படங்கள் உள்ளன. இந்த இணையதளத்தில் பல்வேறு தமிழ் இணையதளங்களுக்குச் செல்ல இணைப்புகளும்
வழங்கப்பட்டுள்ளன.
மு.இளங்கோவன் பாடிய நடவுப்பாடல்கள் ஒளிவட்டும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இதன் முதல் படியைப் புதுச்சேரி பொ.தி.ப. அறக்கட்டளையின் தலைவர் நர்மதா சாந்தசீலன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த கு.மோகன் வரவேற்றார். இலக்கிய வட்டத்தின் செயலாளர் கோ.முருகன் நன்றி கூறினார். பேராசிரியர் ஆ.மணி நிகழ்ச்சியைத் தொகுத்துவழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த தமிழறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications