குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி பெரிதும் நிலவத் தேவை போதிய பணமா? புரிந்துகொள்ளும் மனமா?

சங்கச் செயலாளர் திருமதி. காயத்ரி சந்திரசேகர் வரவேற்புரையாற்ற தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது. சங்கத் தலைவி திருமதி. மீனாகுமாரி பத்மநாதன் புத்தாண்டு, வீரம் சொட்ட உனக்கேன் கிஸ்தி எனக்கேட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், இந்து சமயத்திற்கு கிடைத்த இளம் ஆன்மீகக் குரு விவேகானந்தர், இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநாட்ட பாடுபட்ட முகம்மது நபி (ஸல்)ஆகியோரின் பிறந்தநாள், மற்றும் திருவருட்பா அருளிய வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன இராமலிங்க அடிகளார், கர்நாடக இசையின் தந்தை தியாகராஜர் ஆகியோரின் நினைவும், உழவர்களின் திருநாளாம் தைப்பொங்கல் என்று இன்னும் பல சிறப்புக்கள் நிறைந்த இம்மாத நிகழ்ச்சியைப் "பல்சுவை நிகழ்ச்சி"யாகக் கொண்டாடுவதாகக் கூறினார்.
குறள் சொல்லும் நேரத்தில் மாஸ்டர். அதித் பத்மநாதன் திருவள்ளுவர் தினமாக நினைவு கூறும் பொங்கல் நாளின் சிறப்பான உழவுத்தொழிலை குறிக்கும் வகையில் உழவு அதிகாரத்திலிருந்து சில குறள்களைக் கூறி விளக்கம் அளித்தது கருத்து நிறைந்ததாக இருந்தது. திருமதி. ஸ்ரீதேவி சிங்காரவேலன் பல குரல்களில் பேசி நடிக்கும் மோனோ ஆக்ட்டில், கிராமத்திலிருந்து மகனுடன் துபாய் வந்து செல்லும் தாயின் பயணத்தைக் காமெடியாக நடித்து காட்டியதோடு பிறந்த நாட்டை மதிக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்னது அருமை.
வயலில் இறங்கி வேலை செய்யும் பெண்கள் வந்தே மாதரம் பாடலை கேட்டவுடன் ஆடிப்பாடித் தம்மகிழ்ச்சியைக் காட்டும் வகையில் நடனத்தை வடிவமைத்திருந்தார் திருமதி. ஸ்ரீரங்கநாச்சியார். தியாகராஜரின் ஆராதனை சிறப்பு நிகழ்ச்சிக்கு நம்மால் செல்ல முடியவில்லையே என்ற குறையைத்
தீர்க்கும் விதமாக தியாகராஜர் அவர்களின் கர்நாடகப் பாடல்களை வைத்து புதிய பரிமாணத்தில் திருமதி. ராதிகா ஆனந்த் அவர்கள் அமைத்திருந்த கர்நாடக மெட்லி இசை அனைவரின் பாரட்டையும் அள்ளிச் சென்றது.
டாக்டர் பர்வின் பானு ஜாபர் அலி தன் கணவர், குழந்தைகளுடன் கலந்துரையாடல் வழியாக முகம்மது நபி (ஸல்) அவர்களின் நற்குணங்களை எடுத்துச் சொன்னது எல்லோருக்கும் பயனுள்ளதாக அமைந்தது. விவேகானந்தர் குறித்த திரு.சோ. நடராஜன் அவர்களின் கவிதை வரவேற்பினைப் பெற்றது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட குழந்தைகள் தங்களின் திறமைகளை மிகச் சிறப்பாக வெளிக்காட்டினர் என்று வந்திருந்த எல்லோரும் பாராட்டினர். சிறப்புப் பட்டிமன்றம் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி பெரிதும் நிலவத் தேவை போதிய பணமா? புரிந்துகொள்ளும் மனமா? என்ற தலைப்பில், கவியரசு கண்ணதாசன் மீது பற்று கொண்டவரும், பலரையும் எழுத வைத்து உயர்த்திட நினைப்பவரும், பலநூல்களை எழுதியவரும், தமிழ்த்தேரின் ஆசிரியருமான மதிப்பிற்குரிய திரு. ரவிச்சந்திரன் தலைமையில் ஆரம்பமாக, அவை களை கட்டியது. இருதரப்பினரும் இயல்பாக தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல, நடுவர் அவர்கள் அதற்கேற்ப வளைந்தும் நெளிந்தும் ஊக்கம் தந்து உற்சாகம் ஊட்டினார். இறுதியில் அருமையான மேற்கோள்களைக் காட்டி குடும்ப மகிழ்ச்சிக்கு போதிய பணம் வேண்டும் என்றாலும், புரிந்து கொள்ளும் மனமே தேவை என்று கூறி முடித்தார்.
துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தன் முத்திரையைப் பதிக்கும் உறுப்பினரும், மிகச் சிறந்த நடன ஆசிரியையும் ஆன திருமதி மீராஸ்ரீகாந் தாயகம் திரும்பிச் செல்வதால் அவர்களுக்குப் பாராட்டும், வாழ்த்தும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவிய அனைவருக்கும் நன்றி கூற, சுவையான உணவும் வழங்கப்பட்டது. வருடத்தின் முதல் நிகழ்ச்சி மிகச்சிறந்த நிகழ்ச்சியாக அமைந்தது என்று வந்திருந்த அனைவரும் பாராட்டிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications