கிறங்க வைக்கும் சின்னச் சின்ன ஞாபகங்கள்...!
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த ஞாபகங்கள் வந்து வந்து நம்மை தாலாட்டும்.. சில ஞாபகங்கள் நம்மை கிறங்கடிக்கும்.
உன் கண்கள் என்னைப் பார்த்து
ஏதோ சொன்னது
என்ன என்று எனக்குத் தெரியவில்லை
ஆனால் சொன்ன பின்னர்
என் இதயம் சில விநாடி நின்று போனது
அதுவும் ஏன் என்று தெரியவில்லை...
கண் பார்த்து ஒருவன் முயங்கிப் போகிறான் என்றால் அது காதலாக மட்டுமேதான் இருக்க முடியும். அதுவும் பவர்புல்லான, நன்கு கொழுக் மொழுக் என உருண்டு திரண்டு நிற்கும் கண்களைப் பார்த்தாலே போதுமே... பட்டென்று மனசு கீழே விழுந்து விடாதா என்ன...
பள்ளிக்கூடத்தில் ஒரு சிறுமி (அப்ப நாமும் சிறுவன்தானே...). பார்க்க படு பளிச். முகமென்றால் அதுதான் முகம், அப்படியே மகாலட்சுமி மாதிரி. அடிக்கடி அதைப் பார்த்தால்தான் நமக்கு உயிரே வரும், அப்படி ஒரு அம்சம். ஆனாலும் பார்க்க பயமும் கூட, அப்பா வேற வாத்தியாராச்சே, நாம் பார்ப்பதை அவர் பார்த்து பிரம்பைத் தூக்கி மண்டையி்ல போட்டுட்டா.. இருந்தாலும் அவ்வப்போது கண்களை அந்தப் பக்கம் வீசி லேசாக பேசி விட்டு வந்த திரில் இருக்கிறதே... க்யூட்.
உன் கண்கள் என்னிடம் மெல்லச் சொன்னது
நான் உன்னை நேசிக்கிறேன் என்று
ஆனால் உன் வாய்தான் கம்மென்று இருக்கிறது
ஓ.. சொல்லச் சொன்னது மனசோ...
ஒவ்வொரு காலகட்டத்திலும் காதல், பற்பல அவதாரம் எடுக்கும். பள்ளிக்கூடக் காதல் ஒரு மாதிரி. கல்லூரிக் காதல் இன்னொரு மாதிரி. வேலைக்குப் போன பின்னர் வரும் காதல் ஒரு தினசு. (திருமணத்திற்குப் பிறகும் கூட நிறையப் பேருக்குக் காதல் வருதுங்க இந்தக் காலத்துல..). இப்படி தசாவதாரம் கமலஹாசன் போல விதம் விதமான கெட்டப்பில் காதல் வநதாலும் கூட ஒவ்வொரு காதலுக்கும் ஒரு விஷயம் பொதுவானதாக இருக்கும். அது - அன்பு.
அன்பு இருந்தால்தானே பாசம் வரும், பாசம் வந்தால்தானே நேசம் வரும், நேசம் புரியும்போதுதான் அது காதலாக வாசம் தரும். காதலர்கள் எதைச் சொன்னாலும் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லவே மாட்டார்கள். அது - பொய்.
இதை நம்ப முடியாது பலரால். பொய் சொல்லாமல் எப்படி பாஸு காதலிப்பது என்று கேட்கலாம். காதலியை வர்ணிப்பதில் கொஞ்சமாச்சும் பொய் கலந்தால்தானே சாரே, அழகாக வர்ணிக்க முடியும். எழுதும் கவிதைகளில் பாதி பொய் கலந்ததுதானே என்று கூட கேட்பார்கள். பலருக்கு அப்படி இருக்கலாம். ஆனால் நிஜம் என்ன தெரியுமா.. காதலில் பொய் சொல்ல வராது என்பதே.
உண்மையாக ஒரு மனதை காதலித்துப் பாருங்களேன்.. உங்களுக்குக் கண்டிப்பாக பொய் சொல்ல வராது...
நான் உன்னிடம்
என் உள்ளத்தை மட்டும் தரவில்லை
உண்மையையும் கொடுத்து விட்டேன்
பொய் எனக்கு வராது பெண்ணே
உன் கண்ணைப் பார்த்தால்...
என் மனதில் இல்லை ரகசியம்
எல்லாம் உன் காதலின் மகாத்மியம்...
உன்னை மட்டுமே சுவாசிக்கும் நான்
பொய்யை நேசித்து என்ன புண்ணியம்...
என் ஒவ்வொரு உணர்வும்
என் ஒவ்வொரு வெளிப்பாடும்
சுகந்தமானவை மட்டுமல்ல -சுத்தமானவையும் கூட..
காதலாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி இந்த உணர்வுகளும், ஞாபகங்களும்தான் சார், நம்மை உயிர்ப்போடு உலவ வைக்கின்றன. உங்களுக்குக் காதல் அனுபவம் இருந்தால் அதற்காக வெட்கப்படாதீர்கள், மாறாக பெருமைப்படுங்கள்..மணம் வீசும் ரம்மியமான அந்த நினைவுகளுக்கு என்றுமே 18 வயசுதான்...
மனதுக்கு இதம் கொடுத்தவளே..
மறக்க மாட்டேன் மரணம் என்னைத் தழுவும் வரை...
காதல் என்ற பெயரால் நீ எனக்குக் கொடுத்தது ஆக்சிஜன்
தீரத் தீர உன்னிடம் வருவேன்
தேங்க்ஸ் தேவதையே...!!!
பிறகென்ன கண்ணை மூடி அப்படியே ஒரு ரவுண்டு போய்ட்டு வாங்க...