துபாயில் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் வகுப்பெடுத்த டாக்டர் அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன்
துபாய்: எமிரேட்ஸ் இந்தியா பிரடர்னிட்டி ஃபோரம் ஏற்பாடு செய்த ஃபோஸ்டா 2013 என்ற குடும்பங்களின் இனிய சங்கம நிகழ்ச்சி கடந்த 17ம் தேதி அஜ்மானில் உள்ள இன்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூலில் சிறப்பாக நடைபெற்றது.
காலை 10 மணியளவில் மாணவ, மாணவியருக்கான போட்டிகள் துவங்கின. முன்னதாக அறிவித்தபடி 1 முதல் 3ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பெயிண்டிங்/கிளே மாடலிங் போட்டி நடந்தது.
4 முதல் 6ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. 7 முதல் 9ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு கொலாஜ் போட்டி நடத்தப்பட்டது. 10 முதல் 12ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு பேச்சுப் போட்டி நடைபெற்றது. இது தவிர அனைவருக்குமாக 3 நிமிட குறும்படப் போட்டியும் நடைபெற்றது.

அனைத்துப் போட்டிகளிலும் மாணவ மாணவியர் ஆர்வமாகப் பங்கு பெற்றனர். மாணவர்களுக்குள் எவ்வளவு திறமைகள் இருக்கின்றது என்பதை ஒவ்வொரு போட்டியின் படைப்புகளும் எடுத்தியம்பின. குறிப்பாக மாணவர்கள் படைத்த 3 நிமிட குறும்படங்களைக் கூற வேண்டும். மொத்தம் 7 படைப்புகள் போட்டியில் கலந்து கொண்டன. அத்தனையும் தரமான படைப்புகள். மாணவ மாணவியருள் எவ்வளவு படைப்புத்திறன் ஒளிந்துள்ளது என்பதை அவை வெளிச்சம் போட்டுக் காட்டின.
பெயிண்டிங்/கிளே மாடலிங் போட்டியின் நடுவராக இருந்த முஹம்மத் அவர்கள் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்தார். வினாடி வினா போட்டியை கவுன்சலிங் நிபுணரும், சமூக சேவகருமான இப்றாஹீம் அவர்கள் மிக அழகாக நடத்தினார். கொலாஜ் போட்டிக்கும், 3 நிமிட குறும்படப் போட்டிக்கும் மீம் மீடியா நிறுவன வடிவமைப்பு மேலாளர் ஷாஜஹான் அவர்கள் நடுவராக இருந்து சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்தார். பேச்சுப் போட்டிக்கு ஆடிட்டர் ஹஸன் அவர்களும், பொறியாளர் தமீம் அவர்களும் நடுவராக இருந்து சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
ஜும்ஆ இடைவேளைக்குப் பிறகு அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. அதன் பின்னர் பெற்றோருக்கும், மாணவ-மாணவியருக்கும் பயனுள்ள வகுப்புகள் துவங்கின.
மாணவ மாணவியருக்கு ஏ+ விப்ஜியார் ஆஃப் லைப் (வாழ்க்கையின் வானவில்) என்ற வகுப்பு நடைபெற்றது. இதனை அபுதாபி முஸஃப்பாவிலுள்ள இந்தியன் மாடல் ஸ்கூலின் துணைத் தலைமையாசிரியர் மாஸ்டர் கே.வி. அப்துர் ரஷீத் அவர்கள் அழகுற நடத்தினார். மாணவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வெளிச்சம் தரக்கூடியதாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. 3 மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சி முழுவதையும் மாணவ மாணவியர் சிறிதும் தளர்ச்சியடையாமல் மிக்க ஆர்வத்துடன் கவனித்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் வேறொரு அரங்கில் பெற்றோர்களுக்கு பேரண்ட்டிங் வகுப்பு நடைபெற்றது. கவுன்சலிங் நிபுணரும், சமூக சேவகருமான இப்றாஹீம் அவர்கள் இதனை நடத்தினார். குழந்தைகளைச் சிறப்பாக வளர்ப்பதற்கு நல்ல பல ஆலோசனைகளை அவர் வழங்கினார்.
அதன் பிறகு பிரபல உளவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன் சிறப்புரையாற்றினார். ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் குறித்து மிக விளக்கமாக எளிய முறையில் அவர் உரையாற்றியது அனைவரையும் கவர்ந்தது. கலந்து கொண்டவர்கள் கேட்ட பல சந்தேகங்களுக்கு அவர் பதிலளித்தார்.
இறுதியாக, பரிசளிப்பு விழா மாலை 5.30 மணியளவில் துவங்கியது. எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஃபோரம் பற்றிய அறிமுகவுரையை பொறியாளர் தமீம் அவர்கள் வழங்கினார். அதன் பிறகு சிறந்த குறும்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரமீஸ் என்ற மாணவர் படைத்த ரீவைன்ட் என்ற குறும்படம் திரையிடப்பட்டது.
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. முனவ்வர் அவர்கள் பரிசு பெற்றவர்களின் விவரங்களை அறிவித்தார். டாக்டர் அப்துல்லாஹ் என்ற பெரியார்தாசன், மாஸ்டர் கே.வி. அப்துர் ரஷீத், பொறியாளர் தமீம், எம்.எஸ். அப்துல் ஹமீது ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர்.
பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட பாலஸ்தீனைச் சேர்ந்த ஃபராஹ் ஜமால் குர்தி என்ற மாணவி பாலஸ்தீன் குறித்து உருக்கமாகப் பேசியது அனைவரையும் நெகிழச் செய்தது. அவரே பேச்சுப் போட்டியின் முதல் பரிசையும் தட்டிச் சென்றார். இரண்டாவது பரிசை அஜித் ராய் பெற்றார்.
பேரண்ட்டிங் போட்டியில் முதல் பரிசை ஆதித்யா என்பவரும், இரண்டாவது பரிசை காயத்ரி சோனால் நாயர் என்பவரும் தட்டிச் சென்றனர். வினாடி வினா போட்டியில் முதல் பரிசை சூர்யா ரமேஷ் என்பவரும், இரண்டாவது பரிசை சாண்டோ டோஜி என்பவரும் தட்டிச் சென்றனர்.
கொலாஜ் போட்டியில் முதல் பரிசை சானியா சஞ்சீவ் என்பவரும், இரண்டாவது பரிசை கலீல் அஜ்மல் என்பவரும் தட்டிச் சென்றனர்.
சிறந்த 3 நிமிட குறும்படப் போட்டியில் முதல் பரிசை ரமீஸ் என்பவரும், இரண்டாவது பரிசை முஹம்மத் ஷாஃபி என்பவரும் தட்டிச் சென்றனர்.
முதல் பரிசாக 8 கிராம் தங்க நாணயமும், இரண்டாவது பரிசாக 4 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டன. இந்தத் தங்க நாணயங்கள் அனைத்தையும் அல் ஹசீனா ஜுவல்லர்ஸ் நிறுவனத்தார் மனமுவந்து அனுசரனை வழங்கினர். இவையல்லாமல் மூன்றாவது இடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிக்ஸ் லேண்ட், டைனா டிரேட், பிஸ்ஸாரோ ஆகிய நிறுவனங்கள் அனுசரனை வழங்கிய கிஃப்ட் வவுச்சர்கள் ஆறுதல் பரிசுகளாக வழங்கப்பட்டன.
இறுதியாக முனவ்வர் அவர்கள் நன்றி நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.












Click it and Unblock the Notifications