குவைத்தில் நடந்த முப்பெரும் விழா: அப்துல் ரஹ்மான் எம்.பி. பங்கேற்பு
குவைத்: குவைத்தில் காயிதே மில்லத் பேரவை சார்பில் கடந்த 4ம் தேதி அன்று மாலை முப்பெரும் விழா பிரமாண்டமாக நடைபெற்றது.
குவைத் காயிதே மில்லத் பேரவையின் சமுதாய விழிப்புணர்வு மாநாடு, மணிச்சுடர் சிறப்பு மலர் அறிமுக விழா, சிந்தனை செல்வர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமது அவர்கள் எழுதி ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் தொகுத்த ‘அன்பு தம்பிக்கு அப்துஸ் ஸமது கடிதம்' நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கடந்த 4ம் தேதி அன்று அல்-ரவ்தா ஜம்இய்யத் துல் இஸ்லாஹ் ஆடிட்டோடிரியத்தில் சிராஜுல் மில்லத் அரங்கில் நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு தொடங்கிய விழா நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்றது. குவைத் மஜ்லிஸ் இஹ்யாவுஸ் சுன்னா தலைவர் மௌலானா மவ்லவி டி.பி. அப்துல் லத்தீப் காசிமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத் துணைத் தலைவர் மௌலானா மவ்லவி நிஜாமுத்தீன் பாகவி இறைமறை ஓதினார்.
குவைத் காயிதே மில்லத் பேரவை தலைவர் முஹம்மது பந்தர், ஆர். முஹம்மது பாரூக் அறிமுகவுரை நிகழ்த்தினர். பொதுச் செயலாளர் வடக்கு மாங்குடி ஏ.அப்துல் முத்தலிப் வரவேற்று பேசினார்.
தமிழ் முஸ்லிம் கலாச்சார கழகத் தலைவர் ஆவூர் ஏ. பஷீர் அஹமது, முன்னாள் தலைவர் டெல்லி பாஷா அப்துல் காதர், டி.வி.எஸ். கார்கோ நிர்வாக இயக்குனர் அலாவுதீன், திருமங்கலக்குடி அப்துர் ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
மணிச்சுடர் வெள்ளி விழா சிறப்பு மலரை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட பேரவை தலைவர் ஆர். முஹம்மது பாரூக் பெற்றுக் கொண்டார்.
இரண்டாம் பிரதியை மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் வெளியிட பேரவை பொதுச் செயலாளர் அப்துல் முத்தலிப் பெற்றுக் கொண்டார். பேரவை பொருளாளர் காரைக்கால் எஸ்.எம். ஆரிப் மரைக்காயர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் இச்சிறப்பு மலர் வழங்கப்பட்டது. ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் தொகுத்த 'அன்பு தம்பிக்கு அப்துஸ் ஸமது கடிதம்' நூலை தலைவர் பேராசிரியர் வெளியிட மௌலானா மவ்லவி முஹம்மது அலி ரசாதி பெற்றுக் கொண்டார்.
பின்னர் தொடங்கிய சமுதாய விழிப்புணர்வு மாநாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தேசிய செயலாளர் அப்துஸ் ஸமது சமதானி எம்.எல்.ஏ., தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில செயலாளர் நெல்லை அப்துல் மஜீத், காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பேரவை துணைச் செயலாளர் சத்திரமனை ஹஸன் முஹம்மது நன்றி கூறினார். பேரவை செய்தி தொடர்பாளர் அய்யம் பேட்டை கம்பளி எம். முஹம்மது பஷீர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இம்மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு பொன்னாடைகளும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த விழாவை மிகவும் வெற்றிகரமாக நடத்திய குவைத் காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் அனைவருக்கும் தலைவர் பேராசிரியர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். பேரவையின் துணைச் செயலாளர் சென்னை எம். ஷாஹின்ஷா கான் சேவையை பாராட்டி தொண்டர் திலகம் என்ற பட்டத்தையும், நினைவுப் பரிசையும் தலைவர் வழங்கினார்.
இந்த விழா தமிழ்நாட்டில் நடைபெறுவதை போல் பிரமாண்ட எழுச்சியுடன் காணப்பட்டது. விழா நடந்த இடத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பச்சிளம் பிறைக்கொடிகளும், ஏணி சின்னமும் வைக்கப்பட்டிருந்தன. ஏராளமான பெண்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் விருந்து உபச்சாரமும் செய்யப்பட்டது.
குவைத் காயிதே மில்லத் பேரவை முப்பெரும் விழா குவைத் வாழ் தமிழக முஸ்லிம்களுக்கிடையே மிகுந்த எழுச்சியையும், சிறந்த ஒருங்கிணைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications