குவைத் வாழ் தமிழரா?: வாங்க, கடிதம் எழுதி பரிசு பெறலாம்
குவைத்: கடிதம் எனப்படுவது இருவருக்கிடையே இடம்பெறும் எழுத்து தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கின்றது. தமிழில் இதை அஞ்சல் என்றும் கூறுவர். தொடக்கத்தில் காகித வழி நேரடி பரிமாற்றமாக இருந்த இந்தத் தொடர்பு, இணையம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இணையம் ஊடாக மின்னஞ்சல் ஆகவும் வடிவெடுத்தது.
கடிதம் எழுதுதல் என்கிற ஒரு பயன்பாடு, மொழியின் வளர்வு நிலைக்கும், உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கும் ஒரு சரியான ஊடகமாக இருக்கிறது, தொலைவில் இருக்கும் உறவுகளும், நட்புகளும் தொடர்பு கொள்ள இருந்த ஒரு மிகச் சரியான வழியாக இருந்து வந்த கடிதம் எழுதும் பழக்கம், தமிழ் மொழியியல் வரலாற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறதா என்கிற ஒரு கேள்வி எழுகிறது.
தமிழ் மொழி வரலாற்றில் கடித இலக்கியம் என்கிற ஒரு தொடர்பு ஊடகம் பல்வேறு சூழல்களைக் கடந்து அரசியல் இயக்கங்கள் வரை தனது பங்களிப்பை செய்து இருக்கிறது, தந்தை பெரியார், சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் முதல் கலைஞர் கருணாநிதி வரையில் பல தலைவர்கள் தங்கள் கடிதங்கள் மூலம் பல்வேறு துறைகளில் கோலோச்சி இருக்கிறார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் கடிதம் என்பது முக்கிய இடத்தை வகிக்கின்றது. திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியல் பக்கங்களும், இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களும் கடிதம் குறித்த பல்வேறு முக்கிய செய்திகளை உலக மக்களுக்கு வழங்கியிருக்கின்றன.
கடிதம் எழுதுவதில் இருக்கும் ஒரு உணர்வு ரீதியிலான தொடர்பு நிலை, வேறு எந்த ஒரு தொழில்நுட்பக் கருவிக்கும் இல்லாத ஒரு சிறப்பு நிலையாகும். நமது கருத்துகளையும், உணர்வுகளையும் சரியான ஒரு திசையில் கொண்டு செல்வதற்கு கடிதம் சரியான தீர்வுகளைக் கொடுக்கும். மேலும் மொழி மேலாண்மைக்கும், இன்றைய இளைஞர்களின் இலக்கிய, இலக்கண அறிவு வளர்வுக்கும் கடிதம் எழுதும் முறை சிறப்பான ஒரு தீர்வாகும்.
கடிதம் எழுதும் ஒரு கலையை நமது மூத்த தலைமுறை மட்டுமின்றி, இளைய தலைமுறையினரும் எவ்வித வேறுபாடின்றி அனைவரும் தொடர்ந்து நமது பண்பாட்டு அடையாளமாக இருக்கும் கடிதம் என்கிற ஒரு மொழியியல் ஊடக வளர்வுக்கு நம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) வரும் 31ம் தேதி சங்கத்தின் 8ம் ஆண்டு இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகளின் சிறப்பு போட்டியாக "வாருங்கள்....! உங்கள் எண்ணங்களை எழுத்தாக்குங்கள்...!!" என்ற மையக்கருத்தை முன்வைத்து குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு "கடிதம் எழுதும் போட்டி"யை குவைத்தில் முதல் முறையாக ஏற்பாடு செய்துள்ளது.
நாள்: 31.05.2013 வெள்ளிக்கிழமை
நேரம்: நண்பகல் 12:30 மணி முதல் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து...
இடம்: கே-டிக் தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல்,
அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல்,
ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில்,
ஃகைத்தான், குவைத்.
போட்டியின் விதிமுறைகள்:
குவைத்தில் வசிக்கும் தமிழ் தெரிந்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
வயது வரம்பு கிடையாது.
பெயர் மற்றும் அலைபேசி எண் போன்றவற்றை குறிப்பிடுவது அவசியம்.
யாரும் யாருக்கு வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம்.
பொருள், மொழிநடை மற்றும் உள்ளடக்கம் கவனிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் சிறப்பான பத்து (10) கடிதங்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
ஏ4அளவு காகிதத்தில் ஒரு பக்கத்திற்கு மிகாமல் 30 நிமிடத்திற்குள் கடிதம் தமிழில் எழுதப்பட வேண்டும்.
குவைத்தில் கல்வி பயிலும் பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் ஆங்கிலத்தில் எழுதலாம்.
கடிதம் எழுதுவதற்குத் தேவையான தாள் மற்றும் எழுதுகோல் அரங்கத்தில் வழங்கப்படும்.
நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதியும், அனைவருக்கும் குளிர்பானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த அரிய வாய்ப்பை குவைத் வாழ் தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications