ஸ்டிக்கர் கோலமும், குக்கர் பொங்கலும்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று உழவர் பெருமக்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பார்கள். தைத் திருநாள் அன்று விறகு அடுப்பில் மண் பானை வைத்து பச்சரிசி, வெல்லம், நெய், உலர் திராட்சை, முந்திரி, பால் ஆகியவற்றை சேர்த்து மணக்க, மணக்க பொங்கல் செய்வார்கள். அது பொங்கி வரும்போது சங்கை ஊதி பொங்கலோ பொங்கல் என்று ஆனந்த முழக்கமிடுவார்கள்.
அதன் பிறகு சிறிது பொங்கலை எடுத்து நெய்வேத்யம் செய்துவிட்டு உற்றார், உறவினர்களுக்கு பொங்கல், கரும்பு, தேங்காய் ஆகியவற்றை கொடுத்து மகிழ்வர். இதைப் படிக்கும்போதே எவ்வளவு இனிமையாக இருக்கிறது.
தற்போது நவீன பொங்கலைப் பார்க்கலாம். கிராம மக்கள் மண் பானையில் பொங்கல் வைத்தாலும் நகர மக்கள் எப்படி பொங்கல் செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். எப்பொழுதும் காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டதுபோல் ஓடும் நகர மக்களுக்கு மண் பானையில் எல்லாம் பொங்கல் வைக்க நேரமில்லை.
அதனால் கேஸ் அடுப்பில் குக்கரில் பொங்கல் வைத்து அதை சாமிக்கு படைத்துவிட்டு தாங்களும் உண்கின்றனர். பக்கத்து வீட்டில் இருப்பது யார் என்றே தெரியாமல் இருக்கும் நகரத்தார் எப்படி அவர்களுக்கு பொங்கலும், கரும்பும் கொடுக்க முடியும்.
பொங்கல் திருநாள் அன்று வீட்டு வாசலில் அரிசி மாவு கோலம் போடுவார்கள். அரிசி மாவை வைத்து கோலம் போடுவதே அது எரும்பு போன்ற உயிரினங்கள் உண்ணட்டும் என்று தான். ஆனால் இன்று கிராம மக்களே அரிசி மாவு கோலம் போடுவதில்லை. மாறாக ரசாயனப்பொடி கோலம் போடுகின்றனர். இந்நிலையில் நகரத்தாருக்கு கோலம் போட எல்லாம் நேரம் ஏது. அதனால் கடையில் இருந்து ஸ்டிக்கர் கோலத்தை வாங்கி வந்து வீட்டு வாசலில் ஒட்டிவிடுகின்றனர்.
பண்டிகை நாட்கள் என்றால் உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய காலம் எல்லாம் மலையேறிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.