ரியாத்தில் வெளிநாட்டு தமிழர்களுக்கு நிதாகத் குறித்த விழிப்புணர்வு முகாம்
ரியாத்: சவூதி அரேபியாவில் சட்ட மீறலாகவும், உரிய ஆவணங்கள் இன்றியும் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் தங்கள் குடிமை மற்றும் பணிநிலைமைகளைச் சரி செய்துகொள்ளும் பொருட்டு சவூதி அரசு மூன்று மாத கால பொது மன்னிப்பு அளித்திருந்தது அறிந்ததே.
ஜூலை 3ம் தேதியுடன் முடிவடையும் இக்காலத்துக்குள் சட்ட மீறலாகத் தங்கியுள்ள இந்தியர்கள் தங்கள் ஆவணங்களைச் சரி செய்துகொள்ளவும், அல்லது எவ்வித தண்டனையோ அபராதமோ இன்றி நாடு திரும்பவும் ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் முழு வீச்சில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. தூதரகத்தின் இச்செய்தியை தமிழ் பேசும் மக்களிடம் சேர்ப்பிக்கும் விதமாக விழிப்புணர்வு முகாம் ஒன்றை தமுமுக அமைப்பின் சவூதி மத்திய மண்டலக் கிளையும், ரியாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தின. கடந்த 7ம் தேதி ஷிஃபா அல் ஜஸீரா மருத்துவமனை கட்டிடத்தின் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவை மெளலவி ஹசன் ஃபிர்தவ்ஸி இறைமறை ஓதி தொடங்கி வைத்தார்.
ரியாத் தமிழ்ச்சங்கத் தலைவர் காயல் S. ஹைதர் அலீ தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் தமுமுக துணைச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் வரவேற்புரை வழங்கினார். சவூதி அரசின் சலுகைகள் குறித்த காட்சியேடுகளை (ஸ்லைடு ஷோ)ஒளிபரப்பி ரியாத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் இம்தியாஸ் அஹமது விளக்கம் அளித்தார்.
நிதாகத் என்னும் சவூதி அரசின் புதிய சட்டம் பற்றியும் தமிழ்ச் சகோதரர்கள் தங்கள் ஆவணங்களைச் சரி செய்து கொள்வதிலும், நாடு திரும்ப உதவும் அவசரக் கடவுச் சான்றுகளை (அவுட்பாஸ்) பெறுவதிலும் உள்ள சந்தேகங்களுக்கும் உரிய விளக்கத்தையும் தமுமுக மண்டலச் செயலாளர் ஹுசைன் கனி தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தார்.
இன்லைன் இமேஜ் 2 தஃபாரஜ் குழுமத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜமால், ரியாத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் பஃக்ருத்தீன்(இப்னு ஹம்துன்), இணைச் செயலாளர் மாலிக் இப்ராஹிம், ஷேக் முஹம்மது ஷாஜஹான், ஜாஃபர் சாதிக், முஹம்மது ஷெரீஃப், முஹம்மது ஷஃபீ, ஷாகுல் ஹமீது, அபுல்ஹசன், அம்மா பேரவை மனோகர் ஆகியோர் பங்களித்த இந்நிகழ்ச்சியில் தங்கள் சட்டதிட்ட ஐயங்களை தமிழ்ச் சகோதரர்கள் கேட்டுத் தெளிவு பெற்றனர்.
சவூதி அரசின் இந்தப் பொதுமன்னிப்புச் சலுகை தவறவிடக் கூடாத நல்வாய்ப்பு என்பதையும், உடனடியாக யாவரும் தங்கள் பணி ஆவணங்களை சரி செய்து கொள்ளவோ, எவ்வித நிபந்தனையுமின்றி நாடு திரும்பவோ செய்யலாம் என்பதை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஹுசைன்கனி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
சமூக சேவகர்களின் உதவியை எந்நேரமும் பெறும் நோக்கில் (தர்ஹீல்) வெளியாக்கு மையங்கள் மற்றும் கடவுச்சீட்டு அலுவலகங்கள் (ஜவாஸாத்) ஆகியவற்றின் உதவிமையங்களின் எண்களும் தெரிவிக்கப்பட்டன.
300க்கும் மேற்பட்ட தமிழ்ச் சகோதரர்கள் கலந்து கொண்டு தங்கள் ஐயங்களைப் போக்கிக் கொண்ட இந்நிகழ்வில் கவிஞர் ஷேக் அப்துல்லா நன்றியுரை நல்கினார்.












Click it and Unblock the Notifications